Monday, December 26, 2011
காயம் செய்யும் பூக்கள்....
நான் சிரமப்பட்டு வார்த்தைகளைச்
சேமித்து வாக்கியமாக்குகிறேன்
நீ மிகச் சிரத்தையாக முற்றுப் புள்ளி
வைத்துவிடுகிறாய்..
உன் காதல் எனை
மணிமேகலையாக்கிவிட்டது
என் இதயப் பாத்திரத்திலிருந்து
உன் நினைவுகளை
எத்தனைச் செலவழித்தாலும் தீர்வதேயில்லை
பூக்களால் காயப்பட்டுவிட்டேன்
முட்களையும் ஏன் எடுத்து வருகிறாய்?..
மௌனத்தைப் போர்த்திக் கொண்டு
நீ காலத்தை நிர்வாணமாக்குகிறாய்
துயரத்தின் பசி பொறுக்க மாட்டாமல்
நம் காதலைத் தின்றுவிட்டேன்
செரிக்கவும் இல்லை உமிழவும் முடியவில்லை
இதயத்தில் கல்லாக சமைந்துவிட்டது...
Saturday, December 24, 2011
நிறமிழந்த பாடல்கள்....
ஒருவகையில் நீ எனது தியானம்
உறவற்று இருப்பதும்
விருப்பு வெறுப்பற்று
உனை உணர்வதும்
பயிற்றுவித்துக் கொண்டிருக்கிறாய்
உனை அறியாமலேயே
பயின்று கொண்டிருக்கிறேன் நானும்
நீ அறியாமலேயே..
எனை உற்றதும் நீ உதறுவதும் நீ
உண்மை எதுவென தெளிவதும் நீ
உலகத்துக்குச் பொய் சொல்வது
தவிர்க்கமுடியாதது
உனக்கு நீயே சொல்லிக் கொள்ள
முடியுமோ?!..
நான் அறிவேன் என்னுடைய
ஒவ்வொரு கவிதையையும் படிப்பதற்கு
உன் ஒரு துளிக் கண்ணீரும்
எட்டிப் பார்க்கும் என்பதை
ஊமையின் வார்த்தைகளைப் பூசி
வரும் என் பாடல்கள்
உன் கண்ணீரில் நிறமிழந்து விடுகின்றன
Friday, December 23, 2011
உனக்கான ஒரு கவிதையோடு....
உன் மௌனத்தை தட்டி தட்டியே
களைத்துவிடுகிறது
என் வார்த்தைகள்...
உனது இருப்பின் இடம்
வழி தெரியாத பயணத்தின்
முடிவிலேயே இருக்கிறது...
என் கனவுக் கூட்டை கட்ட
உன் நினைவு இறகுகளை
சேமிக்கிறேன்...
நான் இமைகளை மூடுவது
கனவிலேனும் நம் சந்திப்பு
நிகழட்டும் என்பதால்
வழி தவறியேனும்
மறக்காமல் வந்துவிடு..
உன் விதி ரேகையின்
தேய்ந்த கோடாகவே
இருக்கிறேன் நான்...
என் தலை எழுத்தில்
நீ மட்டும் முதல் எழுத்தாகவே
இருக்கிறாய்...
உன் நினைவுகளின் இடறலில்
தடுக்கி விழுந்த நான்
ஒவ்வொரு முறையும்
எழுந்திருக்கிறேன் உனக்கான
ஒரு கவிதையோடு...
Thursday, December 22, 2011
உடைக்க முடியாத...
உடைந்த ஓட்டுச் சில்லை சாலைச் சிறுவனின்
கால்கள் எத்திச் செல்கிறது...
காலிக் கோப்பையை தேநீர்
நிரப்பிக் கொண்டே இருக்கிறது...
உனக்கென எழுதப்பட்ட கவிதைகளை
உன் இறுக்கமான மௌனம்
புதைத்துச் செல்கிறது...
எங்கோ தெரியும் மலைகளுக்குப் பின்
ஒளிந்திருக்கும் ரகசியத்தையும்
கடலுக்குள் மூழ்கும் சூரியனின்
அதிசயத்தையும்
அடர்ந்த காட்டில் நரியின் ஓலத்தின்
அச்சுறுத்தலையும்
ஊழிக் காற்றில் நடுங்கும் இதழ்களைச்
சுமந்திருக்கும் பூவின்
அச்சங்களையும்
பொருத்தியுள்ளது உன் மௌனம்...
அதிகமாகச் செலவழித்து விட்டேன்
அனேக வார்த்தைகளை
உன் மீதான காதலை, நம்பிக்கைகளை
உனக்கான எதிர்பார்ப்புகளை
என்னின் சில ஏமாற்றங்களை..
அத்தனையும் உடைக்க முடியாத
உன் மௌனத்துக்குப் பின்னே
நீ ஒளித்து வைத்துள்ள
பாசாங்குகளை செரிக்க முடியாமல்
உடைந்துவிடுகின்றன..
என்றேனும் மரணத்தின் ஸ்பரிசத்தை
நீ உணரும் போது
உணர்வுகளின் வெளிகள் நீண்டு
உறவுகளின் சுருக்கம் நீ அடையும்போது
தனிமை எனும் பாலை மண்ணில்
புதையுண்டு ஒரு துளி நீருக்கும்
தாங்கிப் பிடிக்கும் தோளுக்கும்
தழுவிச் கொள்ளும் கைகளுக்கும்
நீ ஏங்கும் போது
எனை மறந்து
யாருமற்றவன் என நீ வருந்தும்
அந் நொடிப்பொழுதில்
உனை மட்டும் சுமந்திருக்கும்
என் உயிரின் மிச்சங்கள் உதிர்ந்துவிடும்
துடி துடித்து...
Wednesday, December 21, 2011
வெற்றிடம்...
உன் பிரிவு என்னுள் எந்தவித
துயரத்தையோ சோகத்தையோ
ஏற்படுத்தவில்லை...
என் கண்களில் நீர் பூத்து உதிரவில்லை
மனம் குழம்பித் தவிக்கவில்லை
இதயம் உடைந்து நொறுங்கவில்லை...
உன் பிரிவு என்னுள் ஏற்படுத்தியது
ஒரு வெற்றிடம்
இனி யாரும்...
மறுபடி உன்னாலேயுமே கூட
நிரப்ப முடியாத...
என் உயிரின் கடைசிச் சொட்டுகளை
மரணம் உறிஞ்சி முடிக்கும்
வரைக்குமான ஒரு வெற்றிடம்...
Tuesday, December 20, 2011
புத்தகப் புழுக்களும் சில அட்டைப் பூச்சிகளும்....
புத்தகப் புழுக்களும் சில அட்டைப் பூச்சிகளும்
இது அவன் பாட்டனார் எழுதிய புத்தகமாம்
ஆயிரம் பிரதிகள் அறுபதே நாளில் விற்றதாம்
தேடிக்கொண்டிருக்கிறான் இன்னமும்
ஆயிரம் பிரதிகளில் ஒன்றுகூட
அவன் குடுபத்தில் இல்லை
கையெழுத்துப் பிரதி உட்பட
தலைமுறையின் எச்சங்களில் எல்லாம்
மிச்சங்கள் இல்லாமல் தேடினான்
பாட்டியின் பழைய டிரங்க்குப் பெட்டியில்
சில இதிகாசம் சிக்கியது
பெரியம்மாவின் அட்டைப் பெட்டியில்
சில மாயாஜாலங்கள் மாட்டியது
அம்மாவின் அலமாரியில்
பக்தி மணம் வீசியது
சித்தியின் சிற்றரையில்
சிற்றிலக்கியம் சிதறியிருந்தது
பெண்கள் வழி உதவாதென்று
ஆண்களிடம் ஆரம்பித்தது அவன் தேடல்
தாத்தாவின் அறையில் சித்த மருத்துவமும்
பெரியப்பாவின் அலமாரியில் சித்தர் பாடல்களும்
அப்பாவின் பீரோவில் சிந்தனாவாதிகளும்
சித்தப்பாவிடம் சில புரட்சியாளர்களும்
நிரம்பியிருந்தனர்
அண்ணனின் ஸ்கைபேகில்
உலக அழகியரும்
அக்காவின் இழுப்பறையில்
அழகியல் புத்தகமும்
சிரித்துக் கொண்டிருந்தன
தலைமுறை இடைவெளிகள்
அவரவர் அலமாரியில்...
ஆனால் அனைத்திலும் ஒற்றுமையாக
மூன்று அட்டைகள் மூடி
முதல் அட்டை மறைத்து
நிர்வாணம் தரித்த புத்தகம் மட்டும்
இன்னும் பத்திரமாக....
புத்தகப் புழுக்களும் சில அட்டைப் பூச்சிகளும்
கடைசிவரை கிடைக்கவில்லை...
Monday, December 19, 2011
எனக்கும் உனக்குமான பரிசு...
நான் செய்யும் தவமெல்லாம்
வரமாகி உனைச் சேர்கிறது
கவிதைகளாக
காதல் தோட்டத்தில்
என் கண்ணீர் குடித்த
உன் வேர்கள்
காயப் பூக்களை பரிசளிக்கிறது...
என் நினைவுகளை சேமித்து வைத்துக்கொள்
என்றேனும் தேவைப்படும்
நீ வெளிப்படுத்த
கண்ணீராகவோ அல்லது
புன்னகையாகவோ...
என் கண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்
என்றேனும் தேவைப்படும்
உன் வாழ்வில் சில
வர்ணங்கள் குழைக்க
என் புன்னகையை பொத்தி வைத்துக்கொள்
என்றேனும் தேவைப்படும்
என் பிரிவு உனைச் சுடுகையில்
ஒத்தடம் கொடுக்க...
உனக்கு பரிசளிக்கவென்றே
ஒவ்வொரு கவிதையையும்
செதுக்குகிறேன்
காகிதத்தில் பூக்களாக...
அத்தனையும் காகிதப் பூக்களாய் மட்டும்
நீ பார்ப்பதால்
உன் முன் அறையிலேயே
உதிர்ந்து போய்விடுகின்றன
தற்கொலைக்கு தூண்டப்பட்டு...
பிரிவின் மெல்லிசை....
நீ தோளில் சூடும் மாலைக்காக
என் உதட்டுப் புன்னகையை
பறித்துச் செல்கிறாய்...
என் வானத்து இரவில்
நட்சத்திரங்களாய் உன் ஞாபகம்
பிரிவாய் இத்தேய்பிறை...
நிலத்தில் கோலமிட
முயன்ற வானம்
மழைப் புள்ளிகளை
நிரப்பியது போல
என் நினைவுப் புள்ளிகளை
உன் நெஞ்சில் விதைத்தேன்...
இழைகள் இழுக்க இடமின்றி
தேங்கிவிட்ட நீரைப் போல
காதல் முளைக்க வழியின்றி
வெறுப்பு உரம் தூவிச் செல்கிறாய்..
Sunday, December 18, 2011
புசிக்க ஏதுமற்று.....
Saturday, December 17, 2011
என்ன செய்யப் போகிறாய்?...
உனை நோக்கி நீண்ட என்
கிளைகளை இரக்கமின்றி
நான் உறங்கிய இரவில்
வெட்டிச் சென்றாய்..
உள் படர்ந்த காதல் வேரை
என்ன செய்யப் போகிறாய்?
Labels:
காதல் கவிதைகள்.,
குறுங்கவிதைகள்...
Friday, December 16, 2011
தேடுகிறேன்...
தேடுகிறேன்..
நீளும் இரவுகளில்..
குறுகிய என் தூக்கத்தில்...
மனதின் ஓரத்தில்...
ஒற்றை வெளிச்சப் புள்ளியாய்
முகவரி தொலைத்த
உன் முக வரியை...
விரைய விரைய விரையமாகும்
முடிவில்லாப் பயணத்தின் முடிவாய்
உன் நினைவுகளை...
கானல் நீராய்
கண்ணாமூச்சி ஆட்டமாய்...
எரியும் இதயத்தில்..
குளிரும் ரத்தத்தில்...
உருகும் உள்ளத்தில்...
தூக்கம் தொலைத்த இமைகளின் ஓரத்தில்...
எங்கேனும் சற்றே இருந்துவிட்டுப் போ...
தனித்த என் தனிமைக்கு துனையாக...
Thursday, December 15, 2011
அடுக்குகள்....
முதலாம் அடுக்கு:
என்ன இது கைகளுக்கு அடியில்
புதுவித துருத்தல்
அட!.. இறக்கை முளைக்கிறதா எனக்கு?!..
பார்த்தபோதே நீண்டு விரிந்து...
பட படவென அடித்துப் பறந்தேன்...
கூதல் இரவில் பௌர்ணமி ஒளியில்
பூமியின் மடிப்புகள் தாவிக் கடந்து
வானின் அடுக்குகள் துளைத்து நுழைந்தேன்
தாய்ப்பால் பருகி தாலாட்டில் கிறங்கி
உதடு சிரிக்க குழந்தை
உறங்கும் சத்தம்
காதலன் காதலி பரிமாறிக் கொண்ட
அலைபேசி செய்தியில் ஒளிர்ந்த
முத்தச் சத்தம்
காசுக்கு தூக்கத்தை பேரம் பேசும்
கால் செண்டர் காளைகளின்
கணினிச் சத்தம்
கந்து வட்டியால் அயல்நாட்டில்
கணவன்-இங்கே ஒற்றைப் பாயில்
மனைவியின் பசலைச் சத்தம்
சோறுகாணா ஏழை இரைப்பையின்
இரைச்சல் சத்தம்
அத்தனை சத்தமும் மொத்தமாய் வாங்கி
ஜாமங்கள் கடந்து அடுக்குகள் திறந்து
தொடர்கிறதென் பறக்கும் பயணம்..
இரண்டாம் அடுக்கு:
மொட்டின் இதழ்கள் விரியும் சத்தம்
பூவோடு வண்டு கூடும் சத்தம்
செடிகளில் இலைகள் துளிர்க்கும் சத்தம்
புல்லில் பனித்துளி உறங்கும் சத்தம்
வேர்கள் நீரை உறிஞ்சும் சத்தம்
நிலவின் கிரணம் என் உடல் தொடும் சத்தம்
கருப்பைக் குழந்தை சுவாசிக்கும் சத்தம்
மழைத்துளி முத்தாக
சிப்பியை யாசிக்கும் சத்தம்
வானை விண்மீன் வாசிக்கும் சத்தம்
ஆழ்மனம் கண்களைப் படிக்கும் சத்தம்
உணர்ந்து கிளர்ந்து மேலடுக்கு அடைந்தேன்...
மூன்றாம் அடுக்கு:
முனிவர்கள் தபசிகள் ஞானிகள் மகான்கள்
தேடியலையும் முதலும் கண்டேன்
முடிவும் கண்டேன்
ஒளிப்பிழம்பு உருக்கிய ஜோதியின் வடிவில்
பேரண்டத்தின் பேரொளி ஜொலிக்க
அமைதியும் அன்பும் எங்கும் நிறைய
பூக்களுற்ற வாசம் பூக்களற்றும் பரவக் கண்டேன்
மனதின் கசடுகள் கசங்கி எரிய
இது தான் முழுமுதல் என்றே மயங்க
இதுவன்றி சுவர்கம் வேறெதுவுமுண்டோ?!
என்றே மனம் முயங்க
சில்லிட்ட உணர்ச்சியில் நான்
மேகம் போல் மிதக்க
அட இது என்ன முகில்கள் தூவும்
பனித்துளிகள் என் முகம்
நனைக்காமல்
இடை நனைக்கிறதே!..
சட்டென்று விழிப்பு அருகே
உடை நனைத்த சிணுங்கலில்
என் மூன்று மாதக் குழந்தை!..
உனைக் கடந்தும்.....
Tuesday, December 13, 2011
நிராகரிப்பு....
நிராகரித்தல் பழகு
நிராகரித்தல் ஏற்கவும் பழகு
நிராகரிப்பு ஒரு நிமிட வலி
ஒரு மணி நேரக் கவலை
ஒரு நாள் துக்கம்...
நிராகரிப்பு மறைந்த ஏற்பு
நிராகரிப்பு மறைத்த ஒப்புதல்
வாழ்நாள் பெருந்துயரம்...
உயிர்ன் கடைசி சொட்டு
முடியும் வரைக்குமான
பெருங்காயம்...
நிராகரிப்பு மீறி வரும்
அங்கீகாரத்தின்
விலை அவமானம்
நிராகரிப்பு கொடுப்போரின் பலம்
பெறுவோரின் பலவீனம்...
ஏதேனும் ஒரு தருணம்
நிராகரித்தலின் நிராகரிப்பு
பாவத்தின் சம்பளமாகப் பெறப்படும்...
ஆகையால் நிராகரித்தல் பழகு
நிராகரிப்பை ஏற்கவும் பழகு
சில நேரங்களில் கசப்பும்
நல் மருந்தாகும்...
Sunday, December 11, 2011
உடையாத பயணம்....
மொட்டை மாடி
நிலவு மழை
அதில் ஒற்றை நாற்காலி
உனக்கும் எனக்குமாய்...
ஊருக்கே தெரியும் நிலா
அதன் வழியே
நம் விழிகளுக்கு மட்டுமே புரியும்
நயன பாஷை...
என் உடல் வெப்பம் குறைய
நீ குளிக்கையில்
நான் நனையும் விந்தை!...
உன் பசிக்கு நான் புசிக்க
உன் வயிரோடு சேர்ந்து
மனமும் நிறையும் மாயம்!...
என் கையில் காயம்
உன் கண்ணில் வலி
எல்லாம் ஒட்டியிருந்தும்
ஒட்டாத தண்டவாளங்களாய்
இணைந்தே செல்கிறோம்
உடையாத பயணத்திற்காக...
Saturday, December 10, 2011
வேண்டும்....
Friday, December 9, 2011
உயிர் உரசும்....
Thursday, December 8, 2011
மௌன வரம்...
Tuesday, December 6, 2011
அவன் என்பது.....
அடைந்துவிட்டதென நினைத்து
அவன்
இழந்துவிட்டது அதிகம்...
பெற்றுவிட்டது என எண்ணி
அவன்
தொலைத்துவிட்டது ஏராளம்...
கடவுளும் சாத்தானும்
அவன்
சக்கரத்தின் இரு பகுதிகள்...
ஒருவரை அடைந்த நேரம்
அவன்
மற்றவர் பால் தனிச்சையாக
நகர்த்தப் படுகிறான்...
இந்த நகர்தலில் சுவடுகள்
என எதையும்
அவன்
பதித்துச் செல்லவில்லை...
அவனுக்கு
என சக்தி எதுவும் இருக்கவில்லை
அவனுக்கு
என புத்தியும் ஏதும் இருக்கவில்லை
அவன்
என்பது ஒரு பெயர்ச் சொல்லாகவே
இருக்கும் வரை
நான் என்பதில்
அவன் மூழ்காதவரை
அவன்
வெறுமையின் உச்சத்தில்
வளர்ச்சிகள் முடித்த
முழு நிலவாகிவிடுகிறான்..
Friday, December 2, 2011
ஆதலால்...
Tuesday, November 29, 2011
கழைக்கூத்தாடி....
வார்த்தைகளாய் இருந்த என் கவிதை
வண்ணத்துப் பூச்சியாய் மாறியது
உன் பார்வை தொட்ட நேரங்களில்..
மழைக்கால மாலைகளில் எல்லாம்
வந்துவிடுகிறது உன் ஞாபகங்கள்
சாரல்களாய் எனை நனைத்த
உன் காதலை நினைவுபடுத்தி..
வெயில் காயும் உச்சிப் போதுகளிலும்
வந்து அடிக்கிறது உன் நினைவலைகள்
உன் வரண்ட மௌனங்கள் சுமந்த
சுடுகாற்றாய் எனைத் தொட்டு
விரும்பினாயா?
விரும்பியது போலிருந்தாயா?
வெறுக்கிறாயா?
வெறுப்பது போலிருக்கிறாயா?
கழைக்கூத்தாடி போல்
நம் காதல் மேல் நடக்கிறேன்
கழியாக உனைப் பற்றியபடி
வீழ்வேனோ?!.. வாழ்வேனோ?!..
என் தத்தளிக்கும் கேள்விகளுக்கு
உன் ஊசிமுனை மௌனத்தில்
ஒளித்துவைத்திருக்கிறாய்
வாழ்க்கைப் புதிரின் விடையை..
Sunday, November 27, 2011
என் வீடு....
என்னுடைய வீடு
சந்தோஷங்களால் ஆனது...
அன்பினால் அமைத்த வாசல்
பாசத்தினால் வேய்ந்த கூரை
நேசங்கள் நிரம்பிய ஜன்னல்கள்
காதல் முகிழ்த்த முற்றம்
சிரிப்புகள் பூக்கும் தோட்டம்
உறுத்தாத கட்டுபாடுகளாய் வேலிகள்..
தகர்த்து நுழைந்தன
விலையேற்றங்கள்..
ஒட்டுப் போட வந்ததன
இலவசங்கள்..
வருவாய் சுருங்கிய வாசல்
தேவைகள் சுருக்கிய ஜன்னல்கள்
பட்ஜெட் கட்டிய கூரை
கணக்கால் நிரம்பிய முற்றம்
சிக்கனம் பூக்கும் தோட்டம்
பணத் தட்டுப்பாடுகளே வேலிகள்..
இன்று என் வீடு
விலைவாசியால் ஆனது...
Friday, November 25, 2011
ஓர் இரவு.. ஒரே இரவு...
முள் ஒடித்த தீர்ப்பின் முடிவில்
என் ஆயுள் முடிவு ஆரம்பித்த இரவு
குற்றமும் பாவமும் கொலைகளும் துரத்த
என் விழிகள் உறக்கம் தொலைத்த இரவு
கண்களின் வழியே திரவம் கசிந்து
அமிலமாய் மாறி சுட்ட இரவு
பசியில் அலையும் இரப்பையின் இரைச்சல்
பாவ இறைச்சி புசித்த இரவு
பன்னிய பாவங்கள் பட்டியல் இட்டு
பட்டிணத்தாரை படித்த இரவு
அரக்க புத்தனும் புத்த அரக்கனும்
மாறி மாறி யுத்தம் செய்த இரவு
கம்பிகள் வழியே தப்பித்த அரக்கம்
வெற்றுத்தரையில் தவழ்ந்தது புத்தம்
ஒவ்வொரு இரவும் இருக்க இறுக்க
பாவமுடிச்சுகள் நெகிழ்ந்தது கண்டேன்
இக் கடைசி இரவின் இறுக்கத்திலே
இம்மை துறந்து இன்மை உணர்ந்தேன்
பிறப்பால் பெற்ற மனித இடத்தை
இறப்பு நிரப்ப
மரணம் பரிசாய் தந்த
மனிதத்துவத்தில்
கடைசி முடிச்சும் கழுத்தை இறுக்க
பாவங்கள் அவிழ்ந்து புத்தனாய் இறந்தேன்..
காலத்துளிகள்...
கால நதியில் கலந்துவிட்ட
மழைத்துளிகளை தேடுவது போல
தேடிக் கொண்டே இருக்கிறேன்...
என் நிகழ்காலத்தில்
தொலைந்து விட்டிருந்த
உன் இறந்தகால நினைவுகளை...
சுடும் வெயிலை விட சுட்டு விட்ட
உன் நிழலின் உக்கிரம்
அதிகமாத்தான் இருக்கிறது...
இன்னும் ரசம் பூசாத என் வீட்டின்
பழைய கண்ணாடியில்
ரசனையோடு பார்க்கிறேன்
பழகிய உன் பிம்பத்தை...
சிக்கலான பின்னல் வலையின்
நுனி முடிச்சு போல் பிடிபடாதது
என்னுள் நீ நுழைந்த நிமிடம்...
என் மூச்சுப் பயிற்சியில்
உள்ளிழுக்கும் வேகம்
வெளிவிடுவதில் இல்லை..
காற்று வெளியில் ஏதோ ஒரு துளியில்
கலந்திருக்கும் உன் “சுவாசம்”
Thursday, November 24, 2011
நீ...
தவிர்க்கவும் முடியாத
பார்க்கவும் முடியாத
மாற்றம் நீ...
விடவும் முடியாத
விழுங்கவும் முடியாத
தவிப்பு நீ...
வார்த்தைகள் சுமந்து நிற்கும்
ஆழ்ந்த மௌனம் நீ...
மௌனங்கள் பேசுகின்ற மொழி நீ...
என் இலையுதிர் காலத்தே வந்த
வசந்தம் நீ...
என் பலமான பலவீனம் நீ..
பலவீனமான பலமும் நீ...
என் முகம் மறைத்து
உன் முகம் மட்டுமே காட்டிய
மாயக் கண்ணாடி நீ...
காட்டாறாய் பெருக்கெடுத்து
சட்டென்று வற்றிவிட்ட
நதி நீ...
முடிவில் தொடங்கி
முதலிலேயே முடிந்துவிட்ட
புதிர் நீ....
Wednesday, November 9, 2011
Friday, November 4, 2011
நான் கடவுள்...
போர்க்குற்றங்கள் ஆக்கிரமிப்புகள்
அத்துமீறல்கள் குண்டுமழைகள்
துரோகங்கள் படுகொலைகள்..
தாள் முழுவதும்
எங்களின் நாள் முழுவதும்
எத்தனை எத்தனை நம்பிக்கைச் சிதறும்
அவலக் கோலங்கள்..
ஏ!?... ஈசனே...
எதற்காக எம் குலம் படைத்தாய்?
எதைக்காக்க எம்மறிவு வளர்த்தாய்?
ஏனிப்படி எம்மினம் அழிக்கிறாய்?
பொங்கியெழுந்த கேள்விகளுக்கு
இடையே என் அலைபேசியில்
மின்னியது ஒரு குறுஞ்செய்தி..
பெண்ணே!..
சற்றே பொறுத்திரு..
இந்நொடி நான் இமயமலை உச்சியின்
ஓரத்தே ஒரு பதுங்கு குழியில்
என்னைக் கடக்கும் இப்போர் விமானம்
குண்டு பொழியாமல் இருந்தால்
அடுத்த நொடி உன் கேள்விகளுக்கு
பதிலளிக்கிறேன்...
இப்படிக்கு
-நான் கடவுள்
தொடரட்டும் இனியும்...
உனைப்பற்றிய படிமங்களை
சற்றே உரசிப் பார்த்தேன்..
ஒரு ஓவியம் போல்
மனதில் வழிந்திருக்கிறாய்
ஒரு சிற்பம் போல
நெஞ்சில் நிறைந்திருக்கிறாய்
காதல் செய்து இதயத்தில்
கசிந்திருக்கிறாய்
புகை போல என்னுடல்
தீண்டியிருக்கிறாய்...
எனக்குப் பிடித்த பலவும்
உனக்கும் பிடித்திருக்கிறது
மழை மண்ணின் வாசம்,
மிளகாயின் நெடி
பட்டாசுப் புகை
வைரமுத்து கவிதைகள்
மழைக்கால இரவுகள்
இளஞ்சூரிய விடியல்கள்
குளிர்காலத் தூக்கம்
நீண்டதொரு ரயில் பயணம்
பூரி சட்டினி
சூடான ஃபில்டர் காபி
இப்படி எத்தனையோ....
ஒத்திருந்தாயோ?
ஒத்திருப்பது போலிருந்தாயோ?!...
அந்நம்பிக்கையில் எந்த ஆணியும்
அறைந்ததில்லை நான்
இதுவரை..
நீயும் நானும் இந்தக் கவிதையும் போல
சொல்லிவிட்ட வார்த்தைகளுடனும்
சொல்ல மறந்த நினைவுகளுடனும்
தொடரட்டும் இனி வரும் காலமும்
Thursday, November 3, 2011
மழைக்காட்டில்....
பூவாய் வருஷிக்கும் மழை
உடல் சூட்டை தொட்டுச் செல்லும்
குளிர்த்தென்றல்
அங்கங்கே முளைத்திருக்கும்
திடீர்க் குளங்கள்...
மொத்தமும் உள்வாங்கி
மழை கழுவிய கருந்தார்ச் சாலையில்
வெண்பாதம் பதிய
மென்மையாய் நடக்க ஆசைதான்...
உடல் ஒட்டும் ஆடையின் வசீகரம்
ஆபாசக் கண்களில் வக்கிரமாகி
பெண்களும் உறுத்திடும் வேளையில்...
சட்டென்று ஓட்டுக்குள்
ஒ(து)டுங்கித்தான் போனேன்
மானசீகமாய் மழைக்காட்டில்
தொலைந்து கொண்டே.....
Saturday, October 29, 2011
சொந்த வீட்டின் அகதிகள்....
Friday, October 28, 2011
நீயும் நானும்...
எப்போதோ படித்த புத்தகத்தை
சும்மா இருக்கையில்
புரட்டியது போல...
மனதாழத்தில் புதைந்திருந்த வரிகள்
மேலெழுந்து வந்தது போல...
என்றோ என் ஆழ்மனதால்
உருவகிக்கப்பட்ட நீ
இன்று மேகமென
மிதந்து வந்தாய்...
மீள் வாசிப்பின் சுகத்தை
உனை நேசிக்கையில்
உணரவைத்தாய்...
புத்தகமும் நீயும் ஒன்று
எப்போதும் நினைவடுக்குகளில் மட்டும்
சஞ்சாரம் செய்வதால்..
அதன் வரிகளும் நீயும் ஒன்று
எப்போதும் எனை மீட்டுச் செல்வதால்
என்றும் நான் உனது வாசகியாய்
கற்பனை எல்லைகளைக்
கனவுகளில் மட்டும்
கடந்து செல்பவளாய்...
Thursday, October 27, 2011
காதல்...
Monday, October 24, 2011
ஏற்ற இறக்கம்...
Thursday, October 20, 2011
மௌனம் போதுமானது...
பருவங்களின் நிறமாற்றத்தில்
தோன்றிய வானவில்
உன் வரவு
இப்போதெல்லாம் என் கவிதைகள்
உன் கைதட்டலுக்கோ சிலாகிப்புக்கோ
ஏங்குவதில்லை
உன்னின் இந்த நிமிட வாசிப்புக்கும்
அடுத்த நிமிட வேலைகளுக்கும் இடையே
உனை நிறுத்தி வைக்கின்ற
ஒரு நொடி மௌனம்
போதுமானதாகி விட்டது
விரல்களின் அழுத்ததில் இமை மூடி
நீ இழுத்து விடும் ஒற்றை மூச்சுக் காற்றில்
நிரம்பி விடுகிறது என்
வார்தைகளுக்கு இடையேயான
இடைவெளிகள்
உற்ற உணர்வுகளை பதியம் போட்டு
உயிர்ப்பித்து கவிதைச் செடியாக
வளர்க்கிறேன்..
பாலைவனப் புல்லின் மேல்
விழுந்த பனித்துளியாய்
என் ஒவ்வொரு கவிதையும்
உன் பார்வைப் பட்டு
சிலிர்க்கின்றது...
ஒரு நிமிடத்தில் எத்தனை முறை
சுவாசிக்கிறேன் என்பது தெரியாது
என் சுவாசித்தலை விட
உனை நேசித்தலே அதிகம்....
எனக்கான காற்றை உன் சுவாசத்தில்
கண்டுகொள்கிறேன்
Wednesday, October 19, 2011
காத்திருக்கிறேன்....
நீ காதோடு செய்த சத்தம்
காதலோடு தந்த முத்தம்
என் நெஞ்சோடு செய்யும் யுத்தம்
உன் நினைவோடு நித்தம் நித்தம்
என் மூக்குத்தி ஸ்பரிசங்களை
நீ மூக்கால் உணரும் போதெல்லாம்
மூர்ச்சையாகிப் போகின்றது
நான் முடிந்து வைத்த
வார்த்தைகள் எல்லாம்
பாதைகள் தூரம் தான்
பயணங்கள் நீளம் தான்
உன் நினைவு நிழலாய்
தொடரும் மட்டும்
குறுகும் சாலை மாயம் தான்
கனவுகள் தின்று நினைவுகள் மென்று
காத்திருக்கிறேன்
காதலில் கொஞ்சம் காதலோடு கொஞ்சம்...
Monday, October 10, 2011
கர்வம் பூசிய....
உனக்கென பிறந்தேன் இல்லை
உனக்கென வளர்ந்தேன் இல்லை
உனக்கென வாழ்வதுவும் இல்லை
ஆனால்
உனக்கென நொடிகளை செலவிட்டு
உனக்கான வரிகளைச் சேமிக்கிறேன்
வார்த்தைகளின் இடைவெளியை
உன் நினைவு கொண்டு நிரப்புகிறேன்
நிழல் நேரங்களின் நினைவுப் பதிவுகளை
காகிதப் பதியமாக்கிப் பொக்கிஷமாய்
பொத்தி வைத்துப் பார்க்கிறேன்
காமம் கலக்காத காதலின்
உடைந்த துகள்களை இன்னமும்
ஈர்த்துக் கொண்டிருக்கும் கர்வம் பூசிய
உன் நினைவலைக் காந்தங்கள்....
Saturday, October 8, 2011
பேதமை என்று...
Saturday, October 1, 2011
சுயநலம்...
உனது கிளை தேடியே...
வரம் வேண்டிப் பெற்ற
சாபமாகிவிட்டது நம் காதல்
யுகங்களில் சொட்டிய
நிமிடங்களைப் போல
நெல் வயலில் ரோஜாக்களாய்
உன் ஞாபகங்கள்
மணம் பரப்பினாலும்
களைகளாய்
இலையுதிர் காலத்திலும்
வெற்றுக் கிளையில் அமர்ந்து செல்லும்
பறவையின் உறவு போல
எங்கு சஞ்சரித்தாலும் நினைவுகள்
உனது கிளை தேடியே..
ஈர உடையில் ஒட்டிக்கொள்ளும்
மணல் நீ
அத்தனை விரைவில் நீங்குவதில்லை
அதனாலேயே வெயில் தவிர்க்கிறேன்
மனதாழத்தில் உனை நிரப்பியிருக்கும்
மானசரோவர் நான்
கலங்கல்கள் பல இருந்தாலும்
களங்கமற்று பிரதிபலிக்கின்றேன்
உனை மட்டும் ...
Thursday, September 15, 2011
மிஸ்டர்.பொது ஜனம்.....
செய்தித்தாள் மடித்துக் கொண்டே
“ அப்பப்பா எப்படி வெலவாசி
ஏறிக்கெடக்கு?...
சாமான் வெல ஏறிப்போச்சு?..
கறிகாய் வெல ஏறிபோச்சு?..
ச்சட்... இந்த பெட்ரோல் வெல
மாசா மாசம் ஏறி
நம்ம BP யும் இல்ல ஏத்துது?..
நாடு எங்க போயிட்டு இருக்கோ?..
மனுஷன் வாழறதா? வயித்த சுருக்கி சாவறதா?
யாருக்கும் அக்கறை இல்ல..
கொஞ்ச நாளாவது வண்டிகள எடுக்காம
பெட்ரோலும் வாங்காம
ஸ்டிரைக் பன்னனும்...”
புலம்பிக்கொண்டே எதையோ
தேடிக்கொண்டிருந்த
என்னவரிடம் கேட்டேன்..
என்னப்பா வேணும்?
எத தேடறீங்க?..
இல்ல.... பைக் சாவி எங்க வச்சேன்?
அடுத்த தெரு நாராயணன்
வீட்டுக்குப் போகனும்...
சரி... அந்த கார் சாவியாச்சும் கொடு..
என்றவரைப் பார்த்து
காற்றில் ஆடிய செய்தித்தாள்
சிரித்தது போலவா இருந்தது?!..
Wednesday, September 14, 2011
சிரிப்பற்றவள்.....
உன் வானத்தில் மேகமாய் நான்
என் வானத்தில் நீலமாய் நீ..
நீ தூவிச் சென்ற நட்சத்திரங்கள்
நம் காதல் வானவில்லின்
க்ரீடங்களாய்
நிறமிழந்த என் வானத்தில்
இன்றும்...
அனிச்சையாய் நீ எப்போதும்
என் உறக்கத்திலும் விழிப்பிலும்
கனவாகவும் நினைவாகவும்...
மணல் வெளியில் ஓடிக் களைத்த
குதிரையாய் நான்
உன் மனவெளியில்
அன்பைத் தேடி...
இரக்கமற்ற என் இரவுகளில்
இமை மூட நீ
முட்களைப் பரிசளிக்கிறாய்..
சிரிக்கும் இதழ்கள் இருந்த போதும்
நான் சிரிப்பற்றவள் ஆகின்றேன்..
Saturday, September 10, 2011
தங்கைக்கோர் கவிதை....
என் பிறந்த நாளுக்காக என் தங்கை எழுதிய இக் கவிதைக்கு,
உடன்பிறப்பவள்...உயிரின் மறுபிறப்பவள்....
என் உறவாய் மலர்ந்த உடன்பிறப்பவள்
என் உயிரின் மறுபிறப்பவள்....
மலரிதழில் மழைத்துளியாய்
என்னை மண்ணில் விழாமல் காப்பவள்...
பூவாசம் முள்ளிற்கும் ஒட்டிக்கொள்வதுண்டு
எனக்காக முள்ளாய் சில நேரம் நீ மாறியதுமுண்டு....
விழியோரம் வழிந்திடும் கண்ணீரும் உன்னால்
அன்பின் மழையாய், மகிழ்ச்சியின் சாரலாய் கரைந்ததுண்டு
நீ நீறு பூத்த நெருப்பாய் நிலைத்திருக்கின்றாய்
உன் கதகதப்பில் என்றும் நான் குளிர்காய்வதற்கு....
கைக்கெட்டிய தூரத்தில் வானவில்
நாம் கைகோர்த்த நேரத்தில் சிரிக்கும்....
இனியும் நினைவில் வைப்பதற்கு நிறைய நிஜங்கள்
காத்திருக்கின்றன...
வாழ்நாள் போதாது உன் நிழலாய் நான் தொடர்வதற்கு.
****************************************
பதிலாக நான் எழுதிய வரிகள் இதோ...
தங்கைக்கோர் கவிதை....
கண் வாசிக்கும் முன்னே என்
கண்ணீர் வாசிக்க
தளும்புதே கண்ணே...
வரிகளில் பாசம் நிரப்பி
அன்பெனும் வாசம் பரப்பி
வாழ்த்துப் பா படைத்திட்டாய்
வார்த்தையில்லை என்னிடத்து
மூழ்கி நிற்கிறேன் உன் அன்பிடத்து
பெற்றதினால் தாயானது பின்னாள்
பெறாமலே தாயானது உன்னால்
எத்தனைப் பெற்றாலும்
என் முதற்பிள்ளை நீ
என் பிள்ளைக்கும்
தாய்ப்பாசம் தந்தவள் நீ
கவிதை தந்தாய் என்
பிறந்தநாள் பரிசாக
கடவுள் தந்தார் உனை
என் பிறப்புக்கும் பரிசாக...
Sunday, September 4, 2011
ஏதேதோ......
Friday, September 2, 2011
மெது மெதுவாய்......
ஆழ் கடலில் எப்போதோ ஒரு பறவை
உதிர்த்துச் சென்ற சிறகைப் போல
இப்போது என் தனிமையில்
மிதக்கும் உன் நினைவு...
மரம் உதிர்த்த வரண்ட இலைகளை
பசுமையாக்கும் முயற்சியில்
மீண்டும் மீண்டும் நனைத்துக் கொண்டிருக்கும்
மழைத்துளியாய் உனில் சொட்டும்
நீ மறந்த என் ஞாபகம்
கல்லெறிந்து நீ போனபின்னும்
முன்னிலும் தெளிவாய் உன் பிம்பம்
என் மனக்குளத்தில்...
ஏதேச்சையாக என்றோ
உள் நுழைந்துவிட்ட உன் நினைவு
எனைப் பற்றி... சுற்றி...
மெது மெதுவாய் ஆட்கொள்கிறது
இன்று ஆட்கொல்லியாக....
Subscribe to:
Posts (Atom)