Friday, August 10, 2012

நான் ஈ...













சிலந்தி போல என்னுள்
வலை பின்னிச் செல்கிறாய்..

மனமெனும் குச்சியால்
அடித்துக் கொண்டே இருக்கிறேன்...

அதையும் உன் பின்னல்களால்
பற்றிக் கொள்கிறாய்...

மறுபடியும்
நான் ஈ ஆகிவிட்டேன்...

எப்போதும் போல் மீண்டும்
உன்னில் மாட்டிக் கொண்டு...

Wednesday, August 1, 2012

சருகு...












என் வன மரத்தின்
நீண்ட கிளை ஒன்று
மௌனமாக அழுது கொண்டிருந்தது
தான் உதிர்த்துவிட்டிருந்த
ஒரு பழுத்த இலைக்காக...

அவ்விலை சருகெனப் பறந்து
நெடிய மலையின் உச்சியில்
சரேலென இறங்கும் அருவி வழி
பயணித்து...

அகன்ற ஆற்றின்
வட்டச் சுழல்களில்
சுற்றிக்கொண்டிருந்து...

சிறிய மீனொன்றின்
முத்தத் தொடுதலில்
துள்ளிப் பறந்து...

சிறுமி ஒருத்தியின்
கை அளாவலில்
ஒட்டிக்கொண்டு...

மீண்டும் வனம் வந்து சேர்ந்தது
வானம் பாடியின்
மெல்லிய இறகோடு...