Wednesday, January 30, 2013

என் அப்பாவின் அன்பு..


அரைக்கிலோ இனிப்பும்
அரைக்கிலோ காரமும்
சாமிக்கு கதம்பமும் எங்களுக்கு
மல்லிகையுமாக
அப்பா வீட்டுக்குள் நுழைந்தாரென்றால்
முதல் தேதி சம்பள நாள்...

லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்தாலும்
அப்பா வாங்கிவரும் என்னமாச்சும்காக
கண்கள் சொருக அரைத் தூக்கத்தில்
காத்திருந்து கட்டிக் கொண்டது 
ஒரு காலம்...

நாள் கிழமை பண்டிகையில்
கண்ணாடி வளையல்களும்
பாடர் வைத்த பாவாடை தாவணியும்
தவனை முறையில் வந்தாலும்
சித்தாடை கட்டிய சிண்ட்ரெல்லாவாய்
சிரிப்புடன் சுற்றி சுற்றி வந்தது
பொற்காலம்..

இன்றும் கிடைக்கிறது
அதைவிடவும் அதிகமாகவும் உசத்தியாகவும்
இலையின் ஓரம் இனிப்புத் துண்டுடன்
சுருட்டப்பட்டிருக்கும் என் அப்பாவின்
அன்பைத்தவிர...