Thursday, May 9, 2013

நீ!.. நான்!!.. ஒரு கோப்பை!!!...


தண்ணீரில் செதுக்கிய சிற்பம் போல
நெளிந்து நெளிந்து சேர்கின்றது
உன் பிம்பம்...

என் காதோரம் சுருண்டிருக்கும்
முடிக்கற்றைகளை நீளமாக்குகையில்
நீண்டும்

கண்களைச் சுருக்குகையில் சுருங்கியும்
என் உதடுகளைச் சுழிக்கையில் சுழித்தும்
என் இதழோரச் சிரிப்பில் விரிந்தும்

உலகை தேக்கி வைத்துள்ள
மதுக் கிண்ணத்தின் வழியே
ததும்பித் ததும்பி வழிகிறது...

நான் குலுங்கிச் சிரித்துக் கொண்டேயிருக்கிறேன்
என் கோப்பையை ஏந்தியபடி...