Thursday, August 27, 2015

நகை முரண்...

இறந்த பின்பும்
உனக்காக
துடித்திருப்பேன்
என்று சொல்பவர்களால்
மட்டுமே
நம்மை
உயிருடன் சாகடிக்கவும்
முடிகிறது.

Tuesday, August 25, 2015

எடை குறைவு....

கடைசியாக உனைப் பார்த்தது
உனதறையில் நீ
நடைபயிற்சி இயந்திரத்துடன்
மூச்சு வாங்கப் போராடிக்
கொண்டிருந்த போதுதான்
நான் வந்து போன சுவடுகளை
பிரிதொரு நாள்
நீ யார் மூலமேனும்
அறிந்திருக்கக் கூடும்
ஆனால் அறிந்திருக்க
வாய்ப்பில்லை
சற்றே கூடுதலாக
குறைந்துவிட்டிருக்கும்
என் உடலின் எடையை..

Monday, August 24, 2015

வசந்தகாலம்.... வசம் இழந்த காலம்...

விடியலில் நினைவுக்கு
வந்தே தொலையாத

தொலைந்திடும்
நள்ளிரவின் கனவு போல
மீண்டு வராமலேயே

காட்டுத்தீயில் அகப்பட்ட
காய்ந்த சருகுகளாய்
சட சடவென கருகிவிட்டது
நம் வசந்தகாலம்
நாம் வசம் இழந்த காலம்...

ஒரு வார்த்தையில் தொடங்கி
சில வார்த்தைகளில் தொடர்ந்து
இப்போது வார்த்தைகள்
தொலைத்த ஊமையின் வெறுமையுடன்
வெளியேறிவிட்டாய்...

எப்போதும் வாதங்களுடனும்
வார்த்தைகளுடனும்
போர் புரிந்து கொண்டிருக்கும் 
நீ
ஒருபோதும் 
அறியப் போவதே இல்லை
என் காதலையும்
இக் கவிதையையும்…

Saturday, August 22, 2015

நிறம் உதிர்த்த.....

பிடித்திருந்த கைகளை
உதறிக் கொண்டாய்
பறத்தலின் திசை
தெறியாது நகர்கிறேன்
என் நிறங்களை
உன் உள்ளங்கைளில்
உதிர்த்துவிட்டு....

Friday, August 21, 2015

கண்ணாம்மூச்சி....

எப்போதும் அழைப்புப்
பதிவுகளில்
மேலிருக்கும் உனது எண்
இப்போதெல்லாம்
மேலெழுப்பப் படுகிறது
வந்து போன அழைப்புகளை
அழித்துப் பார்க்கையில்...

Wednesday, August 5, 2015

இரட்டைச் சந்தோஷம்....


எனது கவிதைகள் இந்த வார 
குமுதம் இதழிலும்
இம் மாத 
மல்லிகை மகள் இதழிலும்..