Saturday, February 27, 2016

காதல் பாடம்..

சந்திக்கும் முதல் 
நொடியிலேயே
கண்களை 
விழுங்கி விட்டால்
பிறகெப்படி உனை படிப்பது 
என்கிறாய்
ம்ம்....
அடுத்த சந்திப்பின் போது
ப்ரெய்லி முறை கற்று வா
என் அசட்டுக் காதலனே...

Thursday, February 11, 2016

நினைவில் மிதக்கும் என் வீடு...

வெள்ளம் புகுந்த என் வீடு
மூழ்கிய கட்டில் மெத்தை சோபா
உடைந்துவிட்டிருந்த
நாற்காலி மேசை
பழுதடைந்திருந்த டிவி ஃப்ரிட்ஜ் வாஷிங்மெஷின்
நனைந்து போயிருந்த
தலையணைகள் புத்தகங்கள்
ஊறிப்போயிருந்த
அலமாரிகள் பலகைகள்
மிதந்து கொண்டிருந்த
பாத்திரங்கள் சிலிண்டர்கள்
அடித்துப் போய்விட்ட உப்பு புளி
பருப்புப் பொட்டலங்கள்
வெள்ளம் வடிந்து சுவடு தேய்ந்த பின்னும்
நினைவில் மிதக்கும்
என் வீடு போலவே
வெள்ள நீரும்
தான் இருந்திருந்த
தாய் நிலத்தை நினைவு கூர்ந்து
வந்து போயிருக்குமோ?!!!...

வெள்ளம் புகுந்த வீடு...

இத்தனை நாட்களாக
தன் அம்மாவை
பூனை குட்டி வளர்க்கலாம்மா..
நாய் குட்டி வளர்கலாம்மா
மீன்குட்டியாவது வளர்கலாமேம்மா..
என நச்சரித்துக் கொண்டே இருந்த
சிறுவனுக்கு
மிகுந்த மகிழ்ச்சி
வெள்ளத்தில் அடித்து வந்து
ஒதுங்கிய அத்தனையும்
அவனது மாடி அறையிலும்

மடியிலும் பாதுகாப்பாய்…

மல்லிகை மகள் இதழில்...


இம் மாத  (பிப்ரவரி 2016) மல்லிகை மகள் புத்தகத்தில் என்னுடைய மூன்று கவிதைகள் வெள்ளம் புகுந்த வீடு எனும் தலைப்பில் பிரசுரமாகியுள்ளன. 
மகிழ்வும் நன்றியும் மல்லிகை மகள் மற்றும் ஆசிரியர் திரு. சிவஞானம் சார்.



Thursday, February 4, 2016

கொஞ்சம் பிடிக்கும்....

உன் பாதம் பதிந்த
என் வாசல் மண்ணை
ஈரம் காயாமல்
பொத்தி வைத்திருக்கிறேன்
என் வீட்டு அஞ்சறைப் பெட்டி
அடுக்கின் மறைவில்
ஹா!!....
உன் மீது தீரா காதல்
என்றெல்லாம் இல்லை
உன்னைக் கொஞ்சம்
பிடிக்கும் அவ்வளவே…