Wednesday, July 20, 2016

பிச்சையல்ல பிரியங்கள் …

காரணங்கள் எதுவாகவோ
இருந்துவிட்டுப் போகட்டும்

அவகாசம் எதுவுமற்ற
கைவிடப்பட்ட பொழுதொன்றில்
உன் மீதான நம்பிக்கையை
தேர்ந்த கறிக்காரன் போல்
ஒரே வெட்டில் நீ
அறுத்தெறிந்த போது
வன்மத்தின் சாயல்களைக் கொண்டிருந்ததன
உன் நேசங்கள்

அலட்சியங்கள் துளைத்த
என் முதுகை
உன் புறக்கனிப்பின் சுவற்றில்
சாய்க்கிறேன்
ஊடறுத்துச் சென்று ருசி பார்க்கிறது
இரத்தவாடை நிரம்பிய
என் ஆதிக் காதலின் இரைஞ்சுதல்களை

என் பிரியத்தை பிய்த்தெடுக்கும்
உரிமையை யார் தந்தது உனக்கு?
சொற்கள் எறிந்து தீர்ந்தாகிவிட்டதென்றா
மௌனத்தை எறிகிறாய்?

சூல் கொண்ட வெட்டுக்கிளியின்
அடி இறகை விலக்கி
உன் பல் குத்தும் குச்சியால்
முட்டைகளை நிரடுவது போலவே
நம் நேசத்தையும் நிரடுகிறாய்
பிச்சையென்று நினைத்துவிட்டாயோ
பிரியங்களை!!?..

பிடிமானங்களைத் தகர்த்தபின்
துக்க வீட்டில் சிதறிக் கிடக்கும்
பூக்களின் வாசனையைப் பற்றி
எதற்கினி ஆராய்ச்சி?