Wednesday, November 1, 2017

சிறு கதை - குறை ஒன்றும் இல்லை


01.11.2017 குமுதம் இதழில் பிரசுரமான கதை

பகலில் பூக்கும் பூக்களை விட இரவிலும் அதிகாலையிலும் பூக்கும் பூக்களுக்கு கூடுதல் அழகு. சந்தடிகள் இல்லாத சத்தங்கள் இல்லாத குறுக்கும் மறுக்கும் ஓடி அலையும் மனிதர்களின் ஓயாத எண்ண அலைகள் சூழாத தூய்மையான பொழுதில் இயற்கையும் இறைவனும் இனைகின்ற தருணத்தில் மொட்டவிழும் மலர்களுக்கு தெய்வ சக்தி அதிகம் தான். மனதில் தோன்றிய சிந்தனைகளினூடே பவளமாகவே உதிர்ந்திருந்த பவளமல்லிகையை ஒவ்வொன்றாக பூக்கூடையில் சேகரித்த படியே நினைத்துக் கொண்டாள் சத்யவதி.

“என்ன சத்யாம்மா இது. ஏன் உங்க உடம்ப இப்படி வருத்திக்கறீங்க. ரெஸ்ட்ல இருங்கம்மா. சாமிக்கு பூ தானே சேகரிக்கனும் இதை எல்லாம் இருளி பார்த்துக்க மாட்டாளா? நீங்க முதல்ல உள்ளாற போங்க” என்றபடியே அவளிடமிருந்த பூக்கூடையை வாங்க முயன்றான் மாயன்.

அவனைப் பார்த்து சிரித்தபடியே “என்ன மாயா இது. பூ சேகரிக்கர சின்ன வேலையைக் கூட செய்ய முடியாத அளவுக்கு நான் முடியாம இல்லையேப்பா” என்றபடியே பூக்களை கூடையில் பொறுக்கிப் போட்டாள்.

உள்ளே சமையல் தடபுடலாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்த சத்யவதி ”என்ன இருளி மக வரான்னு பரபரப்பா வேலை நடக்குதா. ஏன் ஒண்டி ஆளா கஷ்டப்படுற. தள்ளு நானும் கொஞ்சம் உதவறேன்” என்றபடியே காய்களை எடுத்தாள்.

அமாம்மா. உங்க மேல சந்தியாக்கு கொள்ளை பிரியம். எங்கள பார்க்க வருதோ இல்லையோ உங்களைப் பார்க்கத்தானே மாசம் தவறாம வந்துடறா” என்று பெருமை பொங்க சொன்னாள் இருளி.

சத்யவதியின் முகமும் அதைக் கேட்டு மலர்ந்தது. அந்த மலைக் கிராமத்திலேயே டாக்டருக்குப் படிக்கும் முதல் பெண் சந்தியா. மாயன் இருளியின் ஒரே மகள். சத்யவதியை இங்கு கொண்டு வந்து சேர்த்தவளும் அவள் தான். பாட்டி பாட்டி என உயிரை விடுவாள் சத்யவதிக்காக. இதோ இன்றும் வழக்கம் போல சத்யவதியின் மருந்து மாத்திரைகளோடு வந்து இரண்டு நாட்கள் தங்கி அவள் உடல் நிலையை பரிசோதித்து தனது சீனியர் டாக்டரிடம் சேர்ப்பிப்பது அவள் தான்.

’எப்போதோ போய்விட்டிருக்க வேண்டிய உயிரை இழுத்துப் பிடித்து வைத்திருக்கிறது இந்த மலைச்சாதிக் குடும்பம். இவர்களுக்கு அப்படி என்ன செய்துவிட்டேன். என்னால் முடிந்த கல்வி உதவித் தொகை வாங்கிக் கொடுக்கவும், அவள் படிப்பைத் தொடர, சிறிது பண உதவிகள் செய்ததும் மட்டும் தானே. எத்தனை அறிவான அழகான பெண் சந்தியா. அன்பானவளும் கூட’ என்று நினைத்தாள்.

பாட்டி என்று அழைத்தபடியே உள்ளே நுழைந்த சந்தியா தன் தோள் பைகளை கீழே வைத்துவிட்டு சத்யவதியைக் கட்டிக் கொண்டாள். “எப்படி இருக்கீங்க பாட்டி?” என்று கேட்டவளை இழுத்து தன் அருகில் அமர்த்திக் கொண்டாள் சதயவதி.

’ம். நீயே பார்த்துட்டு சொல்லு சந்தியா கண்ணு. நான் எப்படி இருக்கேன். சாகக் கிடந்த பிணத்தை உயிர் கொடுத்து நடமாட வைச்சுருக்கியே. உங்க எல்லாரோட கலப்படமில்லாத அன்பும் நச்சு கலக்காத இந்த மலைக் காத்தும் இப்போதைக்கு எமனை என்கிட்ட வரவிடாது போல இருக்கே’ என்று சொல்லியவளின் உதட்டில் உலர்ந்த புன்னகை சிரித்தாள்.

அம்மாவும் பாட்டியும் சமைத்துவைத்திருந்த அருமையான சாப்பாட்டுக்குப் பின் குட்டித் தூக்கம் போட்டு எழுந்த சந்தியா வழக்கமான பரிசோதனை கிட்டுடன் சத்யவதியிடம் வந்தாள். பரிசோதனைகள் மாத்திரை மருந்துகள் எடுத்துக் கொண்டவை எடுத்துக் கொள்ள வேண்டியவை என எல்லாவற்றையும் முடித்துவிட்டு சத்தியவதியின் கையைப் பிடித்துக் கொண்டு ”இன்னையோட மூனு மாசம் முடியப் போகுது பாட்டி. உங்க ஹெல்த்ல முன்னேற்றம் இருக்கு. ஆனாலும் இது போதாது, இந்த முறையாவது என்னோட சென்னைக்கு வந்து ஒரு முழு செக்கப் செய்துகோங்களேன்” என்றாள்.

“இல்லைமா. நான் அங்கே வந்தா தேவை இல்லாத பிரச்சனைகள் வரும். அப்படி என் உயிர தக்க வச்சுகிட்டு என்ன செய்யப்போறேன் நான். இருக்குற வரைக்கும் இங்கேயே இருந்துடரேனே” என்று கோட்டோவியம் போலத் தெரிந்த மலை முகடுகளை பார்த்தபடியே கூறினாள்.
சொல்லி வைத்தாற் போல இருவரது நினைவுகளும் பழைய நிகழ்வுகளில் சஞ்சரிக்க ஆரம்பித்தது. சத்தியவதிக்கு கருப்பை புற்று நோய் தாக்கி சில வருடங்களுக்கு முன் கருப்பையை எடுத்துவிட்டனர். அதன் பிறகான சில ஆண்டுகள் மருந்து மாத்திரைகளுடன் ஓரளவு நன்றாகவே சென்றது.

சென்ற ஆண்டு திடீரென புற்று நோய் வயிற்றின் மற்ற பாகங்களுக்கு பரவி, மூளையும் தாக்கிய நிலையில் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் நினைவின்றி மருத்துவமனையிலேயே கிடந்தாள். ஆளுக்கொரு வெளிநாட்டில் மகளும் மகனும் இருக்க தனி ஆளாக சத்தியவதியை பார்த்துக் கொள்ள மிகவும் சிரமப்பட்டார் ராமலிங்கம். மகனும் மகளும் இரண்டு மூன்று முறைக்கு மேல் இக்கட்டான கடைசி கால கட்டத்தில் இருக்கும் தாயைப் பார்க்க வந்து வந்து போயினர். ஓரளவுக்கு மேல் அவர்களாலும் அவரவர் குடும்பத்தை விட்டு வந்து உடன் இருக்க முடியவில்லை.

மருத்துவமனை அறையில் கோமா நிலையில் படுத்திருந்த சத்யவதியின் அருகே கவலையுடன் ராமலிங்கமும் மகன் அஷ்வின் மற்றும் மகள் சுதாவும் அமர்ந்திருந்தனர்.
“அப்பா கொஞ்சம் மனச தேத்திகிட்டு ப்ராக்டிகலா யோசிங்க. டாக்டர் எங்கிட்ட ஒரு யோசனை சொன்னார். சுதாக்கும் இதுல உடன் பாடுதான். உங்க கிட்ட தான் எப்படி சொல்றதுன்னு தெரியல” என்றான் அஷ்வின்.

”என்னடா என்ன சொல்லப் போற. இனிமே அடிக்கடி எங்களால வந்து பார்க்க முடியாது. ஏதாவது ஆச்சுன்னா அப்போ வரோம்னு தான? உங்க நிலமையும் புரியுது. இதுல நான் சொல்ல என்ன இருக்குப்பா. என்னால முடிஞ்ச வரைக்கும் பார்த்துக்கறேன். வேற என்ன பன்றது சொல்லு” என்றார்.
அது இல்லைபா. வந்து… அதாவது… என்று இழுத்தபடி அஷ்வின் தயங்க, சுதா தொடர்ந்தாள்.

”அப்பா. அம்மா கிட்டத்தட்ட ஆறுமாசத்துக்கு மேல இதே நிலைமைல தான் இருக்காங்க. நாமளும் ஹாஸ்பிடல் வீடுன்னு மாத்தி மாத்தி வச்சு பார்த்துட்டோம். ஒரு முன்னேற்றமும் இல்லையேப்பா. அதனால டாக்டர் என்ன சஜஷன் சொல்றாருன்னா இங்க சென்னை அவுட்டர்ல லாஸ்ட் கேர் ஹோம்னு ஒன்னு இருக்காம். இந்த மாதிரி நாள்பட கோமாலயோ தீராத வியாதிலயோ வெஜிடபிள் கண்டிஷன்ல இருக்கறவங்களுக்கான ஸ்பெஷல் ஹோமாம் அது”
அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பெரிதாக விசும்பினார் ராமலிங்கம், ‘பார்த்தியா சத்யா உன்ன ஹோம்ல கொண்டு விடச் சொல்றாங்க. நான் இப்படி கையாலாகதவனாகிட்டேனே சத்யா’ என அரற்ற ஆரம்பித்தார்.

அவர் கலங்குவதைப் பார்த்து தர்மசங்கடமாகிவிட்டது இருவருக்கும். இதற்கே இப்படி என்றால் மேற்கொண்டு எப்படி பேச்சை தொடர்வது. இன்னமும் முழு விஷயத்தையும் கூறவில்லையே என கையைப் பிசைந்து கொண்டு நின்றனர்.
அஷ்வின் தான் ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவரை தேற்றிவிட்டு மேலும் தொடர்ந்தான்.

“அப்பா நிலமையை புரிஞ்சுக்கோங்க. அம்மாவ இதே நிலமைல உங்களாலயும் தனியா கவனிச்சுக்க முடியாது. நாங்களும் இருக்கற லீவெல்லாம் எடுத்துட்டு மூனு நாலு தடவை ஷார்ட் பீரியட்ல வந்துட்டு போய்ட்டோம். இனி லீவ் எடுத்தா எங்க வேலைக்கு அப்புறம் உத்திரவாதம் இல்லைப்பா. அதனால அம்மாவை அந்த ஹோம்ல விட்டுடலாம். அவங்க மத்த எல்லாத்தையும் பார்துப்பாங்க. ஏதாவது ஆச்சுன்னா நமக்கு தகவல் கொடுப்பாங்க. அதுவரைக்கும் நாம் யாரும் அங்க போய் பார்கவோ அவங்களை தொடர்பு கொள்ளவோ கூடாது. தகவல் வந்ததும் நாம மத்த காரியங்களை கவனிக்கலாம். டாக்டர்ஸ்ஸும் அம்மா தேறி வந்துடுவாங்கங்கற ஹோப் தரமாட்டேங்கறாங்களேப்பா. நாம என்ன செய்ய முடியும் சொல்லுங்க. எங்களுக்கும் ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா ப்ராக்டிகலா திங்க் பண்ணி பாருங்கப்பா” என்றான்.

பின் ஒரு வழியாக மூவரும் சத்யவதியை லாஸ்ட் கேர் ஹோமில் சேர்ப்பது என்று முடிவெடுத்து ஒரு லட்சம் டெபாசிட் செய்து அங்கு கொண்டு போய் சத்யவதியை விட்டுவிட்டனர். நினைவு தப்பி இருந்தாலும் அவர்கள் பேசுவது அழுவது நடப்பது எல்லாவற்றையும் சத்யவதியின் மூளையும் மனதும் உணர்ந்து கொண்டுதான் இருந்தது. அவளால் பதிலளிக்க முடியவில்லையே தவிர புரிந்து கொள்ள முடிந்தது. அப்போது அவளது பிரார்த்தனையாக ’கடவுளே என்னை சீக்கிரம் அழைத்துக் கொள்ளேன். என்ன பாவம் செய்தேன் என்று என் உறவுகளுக்கு இப்படி ஒரு சிக்கலான சூழ்நிலையை உண்டாக்கும் படி என்னை வைத்திருக்கிறாய்’ என்பதாகத்தான் இருந்தது.

அந்த ஹோமுக்கு சென்றதிலிருந்து அவளுடைய சகல மருத்துவமும் நிறுத்தப்பட்டது. பெயருக்கு சலைன் மட்டும் ஏற்றிக் கொண்டிருந்தனர். அதுவும் இரண்டு நாட்களுக்கு ஒரு பாட்டில் வீதம். மருந்தில்லாமல் உணவில்லாமல் வைத்திருந்தால் கடைசி நிலமையில் இருக்கும் நோயாளிகளின் மரணம் சீக்கிரம் நேரும் என்பதால் இந்த ஏற்பாடு.

அப்போதுதான் சீனியர் டாக்டர்கள் சிலருடனும் உடன் படிக்கும் மாணவ மாணவிகள் சிலருடனும் ப்ராக்டிகல் ஸ்டடிஸ்காக அந்த ஹோமுக்கு சந்தியா வந்தாள். ஒவ்வொரு நோயாளியாக பார்த்து ஆய்வு செய்து அவர்களது வியாதியின் தன்மை அறிகுறி என குறிப்பெடுத்துக் கொண்டே வந்தனர். சத்யவதியை அங்கு பார்த்ததும் சந்தியா அரண்டு போய்விட்டாள். தன் படிப்புக்கும் உதவித் தொகைக்கும் ஏற்பாடு செய்த சத்யாம்மாவா இந்த நிலையில் இங்கு, எனத் துடித்துவிட்டாள்.

தன் சீனியர் டாக்டர் மூலம் அந்த இல்ல உரிமையாளரிட்ம் பேசி குணமாகும் வரையோ அல்லது உயிர் போகும் வரையோ தன் பொறுப்பில் வைத்துக் கொள்ள மிகவும் கஷ்டப்பட்டு அனுமதி வாங்கினாள். வாங்கிய ஒரு லட்ச ரூபாயை திருப்பித்தர வேண்டாம் என்றும் சொல்லி, பேஷண்டையும் தன் பொறுப்பில் எடுத்துச் செல்வதாகக் கூறியதால் ஹோம் உரிமையாளர் அவளுடன் அனுப்பி வைத்துவிட்டார். எதுவாக இருந்தாலும் தனக்குத்தான் முதல் தகவல் தர வேண்டும் என ஆயிரம்முறை சொல்லியே அனுப்பிவைத்தார்.

ஆம்புலன்ஸில் தன்னுடைய மலைக் கிராமத்துக்கு வேண்டிய மருந்து மற்றும் தேவைப்படும் மருத்துவ வசதியையும் செய்து கொண்டு அழைத்து வந்துவிட்டாள். இயற்கையின் சக்தியோ தெய்வ சக்தியோ, மலைக்காட்டின் ஆரோக்கியமான காற்றும் மாசு அற்ற சூழ்நிலையும் மருந்துகளும் சத்யவதியை படிப்படியாக எழ வைத்து நடமாட வைத்தன. அன்று முதல் இன்று வரை ஒரு குழந்தையைப் போல மாயனும் இருளியும் அதற்கும் மேலே சந்தியாவும் அவளைப் பாதுகாத்து வருகின்றனர்.

பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த சந்தியாவை அலைபேசி அழைத்தது. எடுத்துப் பேசியவள் மிகுந்த அதிர்ச்சிக்கு போனாள். பேசி முடிக்கும் வரை பொறுமையாக அவளையே பார்த்துக் கொண்டிருந்த சத்யவதி போனை வைத்ததும் “என்னம்மா என்னாச்சு. ஏன் இப்படி பதட்டமாகிட்டே?” என்றாள்.

பாட்டி இதை நல்ல விஷயம்ன்னு எடுத்துக்கறதா இல்லை கெட்ட விஷயம்னு எடுத்துக்கறதான்னு தெரியல பாட்டி. இந்த முறை உங்க செக்கப்காக மட்டும் நான் வரலை. சில விஷ்யங்களில் உங்க முடிவு என்னங்கறத தெளிவு படுத்திக்கலாம்னு தான் வந்தேன். அதுக்கு முன்னாலயே இப்படி ஒரு செய்தி வரும்னு நான் எதிர் பார்க்கல பாட்டி”

”சொல்லும்மா. இனிமே புதுசா எந்த அதிர்ச்சி என்ன தாக்கப் போறது. என்ன விஷயம் சொல்லு”

”மொதல்ல நான் சொல்ல வந்ததை சொல்லிடறேன். அப்புறமா போன்ல வந்த விஷயத்தைச் சொல்றேன். ஆறு மாசத்துக்கு முன்னால நினைவில்ல்லாத ஸ்டேஜ்ல இங்க உங்களை கூட்டிட்டு வந்தேன். கடவுள் அருளால இந்த இப்போ நீங்க எழுந்து நடமாடுற நிலைக்கு வந்துட்டீங்க. ஒரு நேர்மையான டாக்டரா, உங்க குடும்பத்துக்கு தெரியாம இப்படி தனிச்சையா மருத்துவம் பார்க்கறது சரியா என்கிற குற்ற உணர்வு வருது. அதுவும் இல்லாம உங்களுக்கு மறுபடியும் உங்க குடும்பத்தோட சேர்ந்து வாழனும்னு விருப்பம் ஏதாவது இருக்கா பாட்டி.

நீங்க இங்கயே இருக்கனும்னு என்கிறது தான் என்னோட விருப்பம். ஆனா உங்களுக்கு தாத்தாவ பிரிஞ்சு இருக்கறது கஷ்டமா இருக்குமோன்னு ஒரு உறுத்தல். அதுதான் பேசி ஒரு முடிவெடுக்கலான்னு வந்தேன்.

”சரி அடுத்து போன்ல வந்த செய்தி என்ன அதையும் சொல்லு” என்றாள் சத்யவதி சிறு புன்னகையுடன்.

அது வந்து பாட்டி உங்கள சேர்த்து இருந்தாங்க இல்லையா லாஸ்ட் கேர் ஹோம். அதுல பெரிய தீ விபத்து ஏற்பட்டுடுச்சாம். எல்லா நோயாளிகளும் எழுந்து நடமாட முடியாத கண்டிஷன்ல தான இருந்தாங்க. அதனால அவங்களை விட்டுட்டு வேலை ஆட்கள் மேனேஜர் எல்லாம் தப்பிச்சு வெளில வந்துட்டாங்களாம். அவங்களிலும் சில பேருக்கு நிறைய தீக்காயமாம். ஆனா பேத்தடிக் பாட்டி ஒரு நோயாளியைக் கூட யாராலும் காப்பாத்த முடியல. எல்லாரும் தீயில கருகிட்டாங்களாம் பாட்டி.

”சிவ சிவா! என்ன கொடுமையம்மா இது” என்று கூறும் போதே கண்களில் நீர்த்துளி உதயமாகியது.

“பாட்டி இன்னொறு விஷயமும் இருக்கு. நீங்களும் அந்த தீ விபத்துல இறந்துட்டதா தாத்தாக்கு தகவல் கொடுத்தாச்சாம். நீங்க இங்க இருக்கறது டாக்டர், எனக்கு அப்புறம் அந்த ஹோம் உரிமையாளருக்கு மட்டும் தான தெரியும். அவரால இந்த உண்மையை இப்போ சொல்ல முடியாது. சட்ட சிக்கல் வந்துடும்னு பயந்து நீங்களும் விபத்துல சிக்கி எரிஞ்சு போயிட்டதா தகவல் கொடுத்துட்டாங்க. இப்போ என்ன பண்றது நாம“ என்றாள் சந்தியா.

“ம்.. நீ முதல்ல கேட்ட கேள்விக்கு கடவுளே பதில் சொல்லிட்டார் சந்தியா. நான் இங்க இருக்கறது தான் சரின்னு அவனே முடிவெடுத்துட்டான். உங்களுக்கு ஆட்சேபனை இல்லாத பட்சத்துல நான் இந்த கிராமத்துலயே இருந்துடறேன். என் கணவர் பிள்ளைகளைப் பொருத்தமட்டும் நான் இறந்தது இறந்ததாகவே இருக்கட்டும். ஒரு வேளை நீ என்னைப் பார்க்காம இருந்திருந்தா இங்க கூட்டிட்டு வராம இருந்திருந்தா நானும் வியாதி முத்தியோ இல்லைன்ன இந்த விபத்துலயோ உண்மையாகவே செத்திருப்பேன். அது அப்படியே இருக்கட்டும்.

என் வியாதி குணமாகற வியாதி இல்லை. உங்களோட அன்பும் ஆதரவும் நீ தருகிற ட்ரீட்மெண்ட் இந்த இயற்கை சூழல் எல்லாமா சேர்ந்து என் ஆயுசை கொஞ்சமா நீட்டி வச்சுருக்கு அவ்வளவு தான். இன்னும் மூனு மாசமோ ஆறு மாசமோதான் என் ஆயுசு. தேவை இல்லாம நான் உயிரோட இருக்கேன்ன்னு போய் நின்னு மறுபடி என் வியாதி முத்தி அவங்களுக்கு மீண்டும் ஒரு தொல்லையாவோ இல்ல கவலையாகவோ மாற நான் விரும்பலம்மா.

இப்படியே இந்த இயற்கையோடவே நான் இருந்து இறந்தும் போயிடுறேன். என்னைப் பத்தின தகவலை அவங்களுக்கு கொடுக்க வேண்டாம். நான் இறந்துட்டதா நினைச்சு பதினாறு நாள் காரியம் முடிஞ்சதும் தன் அப்பாவை தன்னோட அமெரிக்காக்கு கூட்டிட்டு போயிடுவான் எங்க பிள்ளை. அவர் இப்போதைக்கு ஆரோக்கியமாத்தான் இருக்கார். என் கவலை இல்லாம அவரோட மீதி காலம் பேரப்பிள்ளைகளோட கழியட்டும்.

அவள் பேசுவதையே ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்த சந்தியா கேட்டாள் ”பாட்டி உங்களுக்கு கொஞ்சம் கூட வருத்தமோ இல்ல கோபமோ அவங்க யார் மேலயும் இல்லையா? குடும்பம் குழந்தைகள்னு உழைச்சோமே ஆனா கடைசி காலத்துல இப்படி கைவிட்டுட்டு போயிட்டாங்களேன்னு தோனலையா?”

“ஏன் வருத்தப் படனும் இல்ல கோபப்படனும். அவங்கவங்க வேலை குடும்பம் சூழ்நிலை எல்லாமாத்தான் அவங்கள இந்த முடிவுக்கு தள்ளிச்சு. முடிஞ்ச வரைக்கும் என்னை நல்ல ஹாஸ்பிட்டல்ல வைத்தியம் மருந்து மாத்திரைன்னு செலவு செஞ்சுன்னு நல்லாத்தான பார்துக்கிட்டாங்க. ஓரளவுக்கு மேல நாம யாரையும் சார்ந்தோ எதிர்ப்பார்ப்பு வச்சுகிட்டோ இருக்கக் கூடாதும்மா.

அதுவும் இல்லாம எந்த அம்மாவும் குழந்தைகளை பெத்துக்கும் போதும் சரி வளர்க்கும் போதும் சரி, இவன் நமக்கு கடைசி காலத்துல என்ன செய்வான்னு நினைச்சு வளர்க்கறதுல்ல. தாயோட அன்பு எப்போவுமே நிபந்தனைகள் அற்ற அன்பு.

எங்கேயோ பெய்யற மழை இங்க குளிர் காத்த அனுப்பிவைக்கலையா. ரத்த சம்பந்தம் இல்லாத நீங்க எல்லாம் இப்போ எனக்கு ஆதரவா இல்லையா. அவங்க எல்லாம் சூழ்நிலைக் கைதிகள். அவங்களைக் குத்தம் சொல்லுறதுல எந்த பயனும் இல்லை.

இன்னும் சொற்ப நாட்கள் தான் என் ஆயுசு. இப்போ என் பிரார்த்தனை எல்லாம், என் கணவர் இனிமே என்னோட கவலை இல்லாம மீதி நாட்களை நிம்மதியா கழிக்கனும் என்கிறதும் யாருக்கும் கஷ்டம் கொடுக்காம அவரோட முடிவு வரனும் என்கிறதும் தான்.

பெண்கள் வீக்கர் செக்ஸ்னு சொல்லுவாங்க ஆனா இந்த மாதிரி சூழ்நிலைகளை புரிஞ்சுக்கற பக்குவமும் ஏத்துக்கற மனப்பாண்மையும் பெண்களுக்குத்தான் ஆண்களைவிட ஸ்டார்ங்கா இருக்கு.  இதோ நான் இன்னும் கொஞ்ச நாள்ல என் பயணத்தை முடிச்சுட்டு பறந்துடுவேன். அங்கே போய் அவருக்காக காத்திருப்பேன். உங்க எல்லாருக்குமான ஆசிகளை மேல இருந்து அனுப்பிக்கிட்டே இருப்பேன் சந்தியா கண்ணு” என்றவளை மனது கனக்க கண்கள் கசிய பார்த்துக் கொண்டே இருந்தாள் சந்தியா.


சிறுகதை - குறை ஒன்றும் இல்லை

இந்த வார குமுதம் இதழில் (01.11.2017) என்னுடைய ”குறை ஒன்றும் இல்லை” சிறுகதை. அழகான படத்துடன் முதல் பத்தி. வரைந்த ஓவியர் ”தமிழ்” அவர்களுக்கும், பிரசுரித்த இதழ் ஆசிரியர் திரு. பிரியா கல்யாண ராமன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.