காத்திருப்பின் கரம் பற்றியபடி
நெடிய பயணம்
மேல் செல்ல
பாதையில்லை
திரும்புதலுக்கான சாத்தியங்களும்
இல்லை
பிரார்த்தனைகளை முனுமுனுப்பாக
முன் வைக்கிறேன்
விரல்களை கோர்த்தும் மடக்கியும்
மற்றுமொரு திரௌபதை என
கைகளை மேல் தூக்கியும்
இருண்ட கண்களின் காட்சி
பிறழ்கையில்
ஒளி குறைந்த வெளிச்சத்தில்
என் கை தொட்டுச் செல்கிறாய் நீ
பிடித்தங்கள் அற்ற போதும்
பிடிமானம் தேடியபடி
இறுகுகின்றன என் விரல்கள்
விடுபட்ட கைகளில்
உன் வியர்வையின் பிசுபிசுப்பு
ஆயுள் ரேகை அழியும்வரை
அழுந்தத் தேய்க்கிறேன்
அழுந்தத் தேய்க்கிறேன்
கைவிடப்பட்டதின் பெருந்துயர் என
வீழ்கிறது என் விருட்சம்..