பேசிய
வார்த்தைகளை
உதைத்து
உருட்டிக்கொண்டே
மௌனத்தால்
முற்றுப் புள்ளியாக்கிவிட்டாய்
நம்
நினைவுகளை...
விளையாட்டு
முடிந்த மைதானத்தில்
திக்கற்று
அலையும் வெற்றுக் காகிதமாய்,
அகால
வேளையில்
பழுதடைந்த
தண்டவாளத்தில்
கைவிடப்பட்ட
ஒற்றை ரயில் பெட்டியின்
தனிமையோடு
அலைகிறது மனது..
எரிமலையின்
ஆழத்தில்
நிச்சலனத்தில்
உறைந்திருக்கும்
உனக்கான
சொற்களை என்னால்
ஒருபோதும்
உறங்க வைக்க முடிவதில்லை...
நீ
வீசி எறிந்த சொற்களின் மாபெரும்
கனத்தில்
நசுங்கிக் கிடக்கின்றன
நமதான
ஒரு ஒற்றைக் கனவும்
அதன்
பெருவெடிப்பில்
கருகிச்
சிதறிய இக் கடைசிக் கவிதையும்...