Tuesday, September 25, 2012

தீராத பிரார்த்தனை ஒன்று...


தீராத பிரார்த்தனை தாங்கிய
காகிதத்துண்டு ஒன்று எட்டியபோது
கடவுள் மொழி புரியாதவராய்
இருந்தார்...

தீராத பிரார்த்தனையின்
குரல் ஒன்று கதறிய போது
கடவுள் காதுகளற்றவராய் இருந்தார்

தீராத பிரார்த்தனையின்
கண்ணீர்த் துளி ஒன்று
சொட்டிய போது கடவுள்
கண்களற்றவராய் இருந்தார்

தீராத பிரார்த்தனையின்
வலி ஒன்று அறைந்த போது
கடவுள் உணர்வுகளற்றாவராய் இருந்தார்

தீராத பிரார்த்தனை ஒன்று
தன் உருச்சிதைந்து
அழுகலின் நாற்றத்துடன் பரவியபோது
கடவுள் உணர்ச்சியற்றவராய் இருந்தார்

இப்படித் தீராத பிரார்த்தனைகள்
சுமந்து பால்வெளியில்
அலைந்து கொண்டிருக்கும்
காகிதத் துண்டுகள் எத்தனையோ?..

அவை என்றேனும் ஒருநாள்
பொழியக் கூடும் அமில மழையாக
கடவுளின் துகள்களையும் கரைத்துக் கொண்டு...

Wednesday, September 19, 2012

பருவம் மாறும் பிரியங்கள்...












ஒரு இளவேணிற் காலத்தே

புல் நுனிகளில் பனித்துளி போல
வந்து அமர்ந்தது உன் பிரியம்...

ஞாயிறின் முதல் கிரணம்
ஓடையில் விழுந்தது போல
தவழ்ந்தது உன் பிரியம்...

வண்ணத்துப் பூச்சியின்
மென் உறிஞ்சுதலாய்
தொடங்கியது உன் பிரியம்...

காற்றில் மகரந்த வாசனை போல்
உள் கலந்தது உன் பிரியம்...

முளையின் பற்றுதல் போல்
வேர்பிடித்து ஊடுருவியது
உன் பிரியம்...

கொழுவில் கொடி போலப்
பற்றிப் படர்ந்தது உன் பிரியம்...

அடை மழைக் காலத்தின்

அடித்துப் பெய்யும் மழையெனவும்
கட்டறுந்து வீசும் காற்றாகவும்

கடும் கோடையின்
சுட்டெரிக்கும் கதிரெனவும்
வரளச் செய்யும் வெப்பமாயும்
மாறிவிட்டிருந்தது...

பருவங்களைப் போல
இப்போது உன் பிரியங்களும்

Tuesday, September 18, 2012

நம் சிநேகம்...



















ஒரு கோப்பை காப்பியுடனாக
ஆரம்பித்தது நம் சிநேகம்...

சிறு தூரலென சிதறி
இலை மேல் தேங்கிய
துளியாகச் சறுக்கி
உயிரென வேரில் நுழைந்தாய்...

காமம் க்ரோதம் வன்மம் பயம்
பகட்டு வேஷம் பொறாமை எதுவுமற்று
மகிழ்ச்சி மட்டுமே கொண்டிருக்கும்
குழந்தை போல் இதயத்தை மாற்றினாய்...

வாழ்க்கையை அந்நிமிடத்திற்காகவே
வாழவைத்தாய்
என் ஆசைக்கும் மீசை
முளைக்கச் செய்தாய்...

உடைந்த வளையல் துண்டுகளிலும்
சாக்லேட் பேப்பரிலும்
புத்தக அட்டைகளிலும்
மின்னி மறையும் உன் பிம்பத்துடன்

அருந்திக் கொண்டிருக்கிறேன்
உனக்காக நிறைத்த கோப்பையை
வேறு எவருடனும் பகிரமுடியாமல்....

மனதின் தவிப்பையும்
சேர்த்து விழுங்கிக் கொண்டு...

Saturday, September 1, 2012

ஊர்மிளை...














மரவுறி தரித்து ராமன் முன்னேற
பத்தினித் தெய்வமென சீதையும்
பின் தொடர்ந்தாள்..

அண்ணன் திருவடி தொழும் சேவகனாய்
உடன் சென்றான் தமையனவன்

மீளாத் துயர் கொண்டிருந்தாலும்
சத்ரியக் குலமகளாய்
சுமித்திரையும் விடை கொடுத்தாள்...

மாளாத் துயரடைந்த தசரதனும்
சொல் காக்க வழியணுப்பினான்..

அவரவர் கடன் அவரவர் கடமை
அவரவர்கள் சிரத்தையாய் நிரூபிக்க..

தமக்கை மணம்புரிந்ததனால்
தானும் ம(ன)ணம் புரிந்து கொண்டு
இலவச இணைப்பாகவே இலக்குவனனை
சேர்ந்த போதும் சோரவில்லை அவள் மனது..

மாளாக் காதலிலும் அன்பிலும் கொண்டவனைக்
அவள் கண்டிருக்கையிலே
தாளாத பிரிவொன்று தானாகவே வருமென்று
பேதை அவள் கனவினிலும் நினையவில்லை...

ஈரேழு புவனத்திலும் சிறந்தவன் நீயென்று
இனி என் அன்னை நீ தந்தை நீ
கொண்டவன் நீ உற்றவன் நீ சொந்தம் நீ பந்தம் நீ
உயிர் மூச்சு நீ என் சகலமும் நீ என நம்பிக்
கைப் பிடித்தவன் தன் துணை மறந்து
இல்லறம் துறந்து துற வரமாய் வேண்டி
ஈரேழு வருடங்கள் உனைப் பாரேன் என
தமையனுடன் சென்ற போதும்...

தாயாய் தந்தையாய் காதலனாய்
கணவனாய் காவலனாய்
கடைசி வரை உனைப் பிரியேன்
என அக்னி வலம் வந்தவனை
மனக் கடலில் மூழ்கச் செய்ய
அவன் கண்ணீராய் வெளியேறிய போதும்
துயருரவில்லை அவள் இதயம்

பிரிவு நெருப்பில் தன் ஆற்றாமை எரித்து
புடம் போட்ட தங்கமென ஒளிர்ந்தனள்
மணாளனின் மானசீகக் கட்டளையால்
அரண்மனையில் அடங்கிப் போன
அடிமை இவள்
நந்தவனத்தின் நடுவே சிறையிருந்த
மகரந்தம் தவிர்த்த பெண் பூ இவள்

கண்களிலும் காண்பதிலும் கனவினிலும்
கணவனையேக் கண்டு
தனைக் கரைத்து தன் நாமம் மறந்து
ஒரு போதும் தன் நிலை மாறா
வைராக்கிய யோகி இவள்..

உடன் பிறந்தவள் கணவனுடன் சென்றுவிட
ஊடாகப் பிறந்த மற்றவளும்
தன்னவனுக்குத் துணையிருக்க

தன் துணையை வழியனுப்பி
துணையற்ற தனிமரமாய் தானாகி
ரகுவம்சத்தின் களங்கம் கழுவிய
தியாகச் சுடர் இவள்..

காதலை காமத்தை தாபத்தை
விரகத்தை மோகத்தை இளமையை
அடக்கிய வைராக்கிய வீரி இவள்..

வஞ்சிக்கப் பட்டு ஏமாற்றப் பட்டு
மறக்கப்பட்டவளாயினும்
சிறிதும் அங்கீகாரம் கிடைக்கப் பெறாத
கற்புக்கரசியாம் தியாகச் சுடராம்
ஊர்மிளையை இங்காவது சிதைக்காமல்
சிந்திப்போம் சிறப்பிக்க....

சீதை! நளாயினி! கண்ணகி! சாவித்திரி!
மாதவி! அகலிகை! வாசுகி!...
கொண்டவரின் அருகிருந்து
உறவாலே உடலாலே உடனிருந்து
கற்பிதம் ஓம்பியவர்கள் கற்புக்கரசிகள் எனில்..

கொண்டவன் உடன் உறையாமல்
உளத்தால் மட்டும் உணர்ந்திருந்து
கற்பை சிறந்தோம்பிய இவள்
கற்புக்கு பேரரசி...


நினைவு நாள்...












நேற்றே நான் இறந்திருந்தேன்
இன்று உனது
நினைவு நாள்...