Monday, February 23, 2015

நானாகிய தோட்டம்....

எனது பெருவெளியில்
தோட்டம் ஒன்று வரைந்தேன்
சில பூக்களையும்
கூடவே சில வண்ணத்துப் பூச்சிகளையும்

வந்து பார்க்கவும்
வாசங்கள் நுகரவும்
சில மனிதர்களையும் வரைந்து வைத்தேன்

விடியலில்
பூக்களின் நிறங்களும்
வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளும்
காணாமல் போயிருந்தன

உதிர்ந்து கிடந்தன சில முகமூடிகள்…

காதல் துளி...

தீராத் தனிமையின்
பெருந்தாகத்தை
தீர்க்க வந்ததுன்
காதலும்
ஒவ்வொரு துளியாகவே…

காத்திருக்கும் ....



சுற்று முற்றும்
எத்தனை பேர் இருந்தாலும்
தெரியாத முகங்களுடன்
என்ன பேசுவது???..
அலைபேசி நிறைய எண்கள் 
இருந்தாலும் தனிமைகாத்திருக்கும் 
சாயங்கலாப் பொழுதுகளில்
தெரிந்தவருடனும் என்ன பேசுவது??...

Monday, February 16, 2015

சீண்டல்கள்…

உறக்கத்தில் உதிக்கும்
உதட்டோரப் புன்னைகைக்குப் பின்
சிணுங்கிக் கொண்டிருந்தன
உன் சீண்டல்கள்…

நீ...... நான்... நீ...



நீ
நான்
சில கவிதைகள்
சொல்வதற்கும்
சொல்லும் போதே மறப்பதற்கும்

நீ நான் சில நினைவுகள்
நினைப்பதற்கும்
நினைக்கும் போதே
மறப்பதற்கும்…

நான்
கொஞ்சு...ம் சாபம்
நீ 
கொஞ்சம்... வரம்


பரிசு....

அன்றலர்ந்த மலரை நுகர்வதையும்
இந்நொடிப் பிறந்த குழவியை
ஏந்துதலையும்
முதல் துளி உள்வாங்கி
பரப்பும் மண்ணின் வாசத்தையும்
முதல் முத்த ஈரத்தையும்
ஒவ்வொரு தாளிலும்
உணர்த்திச் செல்கிறது
நீ பரிசளித்த புத்தகங்கள்....

சாபம்..


ஆணி கீறிய தழும்புகளுக்கு
களிம்பிட வரும்
உன் கைகளுக்கு
சுத்தியல்கள் கிடைக்காமல் போகட்டும்...
_________________________________________________

இதழும் இதயமும்
பற்றி எரியும் வரை
நீ அணைப்பாய் என
நம்பியிருந்தேன்..