Tuesday, April 5, 2011

நீ.. நீயாக....

வேலைக்கு நடுவே தொலைபேசி செய்து
தொல்லைகள் கொடுத்தாய்
நொடிக்கொரு தரம் குறுஞ்செய்தி அனுப்பி
கோபத்தைத் தூண்டினாய்
ஏன் லேட்டு? சாப்பிட்டயா? இன்னுமா கிளம்பல?
கேள்விக் கனைகளால் துளைத்தெடுத்தாய்...
பேசினால் முகம் தூக்கி
பேசாதே போ என்றாய்
பேசாதிருந்தால் உதடு சுழித்து
பேசவே மாட்டியா? என்றாய்
என் அலுவல்கள் புரியாமல்
அவஸ்தைகள் தந்தாய்
ஐயோ! புரிஞ்சுக்கவே மாட்டியா? -அன்று
என் கடுங்கோபக் கத்தலில்
அடங்கித்தான் போனாய்
இன்று எனக்கான உனதனுசரிப்பில்
வெறுமை தெரியுதடி
நான் கேட்ட புரிதலில்
உயிர்ப்பு இல்லையடி
உன் கொஞ்சல்கள் குறைந்த பக்குவத்தில்
ஜீவன் இல்லையடி
வார்த்தைகள் வழித்த
உன் மௌனங்கள் வலிக்கச் செய்யுதடி
எனக்காக நீ வேண்டாம்
நீ.. நீயாக எனக்கு வேண்டும்
மீண்டு வருவாயா? மீண்டும் வருவாயா?...
காத்திருக்கிறேன்...

No comments: