Wednesday, October 28, 2015

மறக்க முடியாத மே 2014.


மே மாதம் 2014 மறக்க முடியாத மகிழ்வான தருணங்களைக் கொடுத்தது. இம்  மாதத்தில் தான் எனது கவிதை முதன் முதலாகபுத்தகத்தில் அச்சேறியது. மல்லிகை மகள் மாத இதழில். அச்சேற்றிய மல்லிகை மகள்  இதழ் ஆசிரியர்
 திரு. சிவஞானம் சாருக்கு எனது மகிழ்வான நன்றிகள்.





இதே மாதத்தில் மீண்டுமொரு ஆச்சரியம். முன்னனி வார இதழான குமுதத்திலும்(28.05.2014 தேதியிட்ட) குழந்தைகளைப் பற்றி எழுதிய கவிதைகள் பிரசுரமாகின. 
பிரசுரித்த குமுதம் இதழ் ஆசிரியர் திரு. ப்ரியாகல்யாணராமன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.





Monday, October 26, 2015

பிரசுரமான கவிதை - தினமணி -”மது ஒழிப்பு”

தினமணி மின் நாளிதழில் “ மது ஒழிப்பு” என்ற தலைப்பின் கீழ் எனது கவிதை.
பிரசுரித்தமைக்கு நன்றி தினமணி மற்றும் திருமதி. உமா சக்தி.

மது ஒழிப்பு

மது மது மது
அன்பைக் கெடுக்குமது
மரியாதைக் குலைக்குமது
குடும்பம் தவிர்க்குமது
உயர்வைக் தடுக்குமது
மனதைக் கலைக்குமது
பண்பைக் தொலைக்குமது

குளிர்ந்த நிலையில் கசந்த திரவம்
உடனே செய்யுமே உபத்திரவம்
மதுவில் தொடங்கி
மாதில் தொடர்ந்து
வாழ்வைக் குடித்து
மரணத்தில் முடிக்கும்
மதுவுக்கு
விலக்கும் வேண்டாம்
ஒழிப்பும் வேண்டாம்
முற்றிலும் செய்வோம் மது அழிப்பு
அரசு செய்யட்டும்
அமைச்சர் செய்யட்டும்
ஆண்டி செய்யட்டும்
குப்பம் சுப்பன் பெருமாள் பேராண்டி
யாரோ தொடங்கட்டும்
என்ற எண்ணம் தவிர்த்து
தனிமதன் தன் ஒழுக்கத்திலிருந்து
துவங்கட்டும்

மது ஒழிப்பும் மது அழிப்பும்…

Sunday, October 4, 2015

ஜன்னல் இதழில் (01 - 14.10.2015)

இம் மாதம் 01.10.2015 - 14.102015 தேதியிட்ட ஜன்னல் இதழில் எனது கவிதைகள் பிரசுரமாகியுள்ளதை நட்புகளுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.
நன்றி ஜன்னல்.









Wednesday, September 9, 2015

பரிசு...

எப்போதுமே உனை நினைக்கும் நேரம்
துளிர்க்கும் ஈரம்
நனைக்கும்
என் இமைகளின் ஓரம்

இன்றென்னவோ
மேலிருந்து 
பள்ளம் நோக்கி 
வீழும் அருவியாய் 
கண்களிலிருந்து  இறங்கி
நெஞ்சுக் கூட்டில் ததும்பி
நாபிச் சுழி நிரப்பிய 
விழி நீரை 
வீழும் நீரை 
தடுக்க முயலவில்லை 

சிறு துளியோ பெரு மழையோ
என் கண்ணீர் என்றுமே உனை
தூற்றாது பதில் கேட்காது

எனக்கு உன் மீது 
புகார்கள் இல்லை
கோபங்கள் இல்லை 
வருத்தங்கள் இல்லை

இவை எல்லாம் எப்போதோ
எனைக் கடக்க வைத்துவிட்டாய்

நீ கொடுக்கும் பிறந்த நாள்
பரிசாக நான் இறக்கும் நாள் வரை
ஏந்திச் செல்வேன்
பொழுது போக்காக
நீ மீன் பிடிக்க ஆரம்பித்திருக்கும்

என் கண்ணீர் துளிகளை..

Monday, September 7, 2015

தாய்ப் பறவை....

என்னால் குழந்தைகள்
இருக்கும் அறையை
சாத்தி வைக்கவே இயலாது
அப்படிச் செய்தால்
எனக்கும் அவர்களுக்குமான
தொடர்பு விடுபட்ட
உணர்வு வருகிறது கூடவே
அவர்களைப் பற்றிய
ஒரு பாதுகாப்பின்மையும்
கோழி தன் குஞ்சுகளைக்
சிறகுக்குள்
காப்பது போலவே தான்
எனக்குள் அவர்களை
பொத்தி வைத்துக் கொள்கிறேன்
வரக்கூடும் ஒரு நாள்
குஞ்சுகள் பருந்தென
சிறகு விரித்து பறந்துவிடக் கூடும்
அப்போதும் நான் கோழியாகவே
அவர்கள் உதிர்த்துவிட்டுப் போன
இறகுகளை சேமித்துக் கொண்டு
அன்னாந்து பார்த்திருப்பேன்
கவலைகள் மறைத்த பெருமிதத்தோடு...

சொல் அடுக்கும் கவிதைக்காரி...

கண்ணீரின் தடம் எங்கும் பாசியென
நீ படிந்திருக்கிறாய்
உன் நினைவுகளில் நிரம்பித் ததும்பும்
என் மனதில் வெற்றிடமே இருப்பதில்லை
பிரிவின் ஏக்கம் இளைக்க வைக்கவில்லை
அசாதாரணமாக எடை கூடியிருக்கிறேன்
சதா உன் நினைவுகளைத் தின்று
உடைந்துவிடும் சாத்தியக் கூறுகள்
அதிகமிருக்கும் நம்பிக்கையின்
அந் நாள் நெருங்குவதை
நாட்காட்டியில் வெறிக்கிறேன்
என் பாடல்களில் இப்போதெல்லாம்
துள்ளல்கள் இருப்பதில்லை
வற்றிப் போன உன் காதலைப் போல
நீ புறக்கனித்த சொற்களை கவிதையாக்கி
வைக்கிறேன்
பிரிதொரு நாள் தேவைப் படும்
நீ குத்திக் காண்பிக்கவேணும்
நான் சொல் அடுக்கும் கவிதைக்காரி
நீ சொல்லெறியும் ஜென்மம்...

Friday, September 4, 2015

விதியால் தீர்மாணிக்கப்படும்…

அன்றைக்கான
அந்தச் சம்பவத்துக்குப் பின்
எனக்குத் தெரிந்துவிட்டது
இனி நீ எனக்கு
அப்பாவாக அம்மாவாக
காதலனாக கணவனாக
தோழனாக துரோகியாக
தேவனாக சாத்தானாக
கடவுளாக மிருகமாக
இன்ன பிற எது எதுவாகவோ
இருக்கப் போகிறாய் என
ஆனால் எது எதுவாக
எப்போதெல்லாம்
என்பது நமது

விதியால் தீர்மாணிக்கப்படும்…