Thursday, January 19, 2012

காணாமல் போனவள்....















நீ அறிமுகமான நாளுக்கும்
உனை அறிந்த நாளுக்கும்
இடையே
நான் காணாமல் போயிருந்தேன்...

நீ தொடுதல் தொடங்கிய கணத்துக்கும்
உன் ஸ்பரிசம் உணர்ந்த கணத்துக்கும்
இடையே
நான் காணாமல் போயிருந்தேன்...

உன் உதடுகள் வார்த்தைகள்
உதிர்த்த நிமிடத்துக்கும்
முத்தங்கள் உணர்த்திய நிமிடத்துக்கும்
இடையே
நான் காணாமல் போயிருந்தேன்...

என் கூச்சம் நிறைந்த தழுவலுக்கும்
உன் தயக்கமற்ற அணைப்பிற்கும்
இடையே
நான் காணாமல் போயிருந்தேன்...

உனைத் தெரிந்து கொண்ட
மணித்துளிக்கும்
உனைப் புரிந்து கொண்ட
மணித்துளிக்கும் இடையே
நான் காணாமல் போயிருந்தேன்...

அந் நேரங்களில் நான் எங்கிருந்தேன்?
எப்படியிருந்தேன்?..
எத்தனை யோசித்தும்...

உற்றது துறந்து மற்றது மறந்து
ஒரு அர்ப்பணிப்பாய் ஒரு சரணாகதியாய்
உன்னில் கரைந்திருந்தது தவிர
வேறேதும் நினைவுக்கு வரவில்லை...

No comments: