
உடல் மறைக்க உடை கேட்டேன்
பட்டாடை தருவித்தாய்
பசியாற உணவு கேட்டேன்
பாலண்ணம் படைத்திட்டாய்
உறைவிட மனை கேட்டேன்
மாளிகையில் வாசம் தந்தாய்
படுத்து எழ பாய் கேட்டேன்
பஞ்சனை மேல் தஞ்சம் தந்தாய்
பட்டாடை உடுத்திக் கொண்டு
பால் கிண்ணம் கையில் ஏந்தி
பத்தடுக்கு மாளிகையில்
பஞ்சனை மேல் தனித்திருக்கேன்
ரசிக்கக் கற்றுக் கொடுத்தவனே
நீ ருசிக்காமல் போனதெங்கே?..
மனம் மயங்க வைத்தவனே
என் மணம் மறந்து போனதெங்கே?
பாதி நாட்கள் ஊடலிலும்
பாதி நாட்கள் தேடலிலும்
கூடல் குறைந்து மீதி வாழ்க்கை போனதெங்கே?..
கடல் முடிவாய் நானிருக்க
தொடுவானமாய் நீ இருக்க
தொடர்பிருந்தும்
தொடத் தொடத் தொலைந்து போனதெங்கே?..
கட்டியணைக்க நீயும் இல்லை
கட்டியழுத உடலும் இல்லை
கட்டு கட்டாய் பணம் மட்டும்
கட்டையிலும் வேகாமல்
கல்லாய் மாறிக் கனக்குதிங்கே....
1 comment:
தனித்துவிடப்பட்ட ஒர் பெண்ணின் ஆதங்கம். நியாயமான ஒர் ஏக்கம். பணம் மட்டுமே அமைதி தராது என கூறி அழகாய வடித்த கவிதைக்கு பாராட்டுக்கள் ஹேமா!
Post a Comment