Friday, June 10, 2011

எப்படிப் புரிய வைப்பேன்?....

பூக்களுக்கு என் மேல் பொறாமை
மழையில் நனைந்து
குளிரெடுக்கையில்
என் தலை சாயும்
உன் மார்பின் கத கதப்பு
தமக்கு கிடைக்கவில்லை என...











பனித் துளிகளுக்கு
என் மேல் பொறாமை
பூ இதழில் விழுந்தாலும்
என் இதழ் ஒற்றும் உன் இதழின்
மென்மை இல்லையென....

நட்சத்திரங்களுக்கு
என் மேல் பொறாமை
உன் கரு நீல விழிகளில்
என்னுருவம் ஒளிர்வது போல
தான் ஓளிர்வதில்லை என...

நிழலுக்கு என் மேல் பொறாமை
உன் கூடவே வந்தாலும்
எனைப்போல உனை ஒட்டி
இருக்க முடிவதில்லையென...

தென்றலுக்கு என் மேல் பொறாமை
நமக்குள் நுழைந்து
உன் உடல் தழுவ
நான் இடைவெளி
கொடுப்பதில்லை என...









மழைக்கு என் மேல் பொறாமை
என் முத்தங்கள்
உனை நனைப்பது போல்
தான் நனைப்பதில்லையென...

பாவம்! அவைகளுக்கு
எப்படிப் புரிய வைப்பேன்

நீ என்னிலும் நான் உன்னிலும்
முழுவதுமாய் கரைந்துவிட்டதை....

No comments: