Saturday, March 10, 2012

மௌனங்களை மௌனங்களாகவே....












சில மௌனங்களை மௌனங்களாகவே
இருக்கவிடுவதில் இருக்கும் சுதந்திரம்
வார்த்தை வடிவம் கொடுக்கையில்
சிறைப்பட்டு விடுகின்றது...

அந்தியில் நீண்டு வளரும்
நம் நிழல்களுக்கு மத்தியில்
முன்பு உருகிய பாறை
இப்போது உருக முடியாத ஐஸ் கட்டியாக
மாறிவிட்டதை வார்த்தைச் சிதைவு பெற்ற
மௌனம் உறைக்கிறது...

நம் நாவுக்கடியில் கசந்து கொண்டிருக்கும்
நிசப்தத்தின் கசிவுகளில் வழுக்கி
ஓடிக் கொண்டிருக்கிறது
நாம் சேர்ந்திருந்த மணித்துளிகள்...

முடிவு செய்யப்பட்ட நிகழ்வுகளில்
ஒருபோதும் ஏற்படுவதேயில்லை
காத்திருத்தலின் சாத்தியங்கள்...

தன் பசிக்கு வார்த்தைகள் அகப்படாததால்
தன்னைத் தானே புசிக்கத் தொடங்குகிறது
நம் இருவருக்கும் இடையேயான
மௌனம்...

No comments: