
எல்லா எச்சரிக்கை உணர்வுகளையும் மீறி
தொடர்ந்து கொண்டிருக்கிறது
உன் மீதான காதல்...
எந்நேரமும் சந்திக்கக் கூடிய
ஏமாற்றங்களைக் கடந்து
தொடர்ந்து கொண்டிருக்கிறது
உன் மீதான காதல்...
எப்போதும் நடக்கக் கூடிய
துரோகத்தின் எதிர்பார்ப்புகளைத் தாண்டி
தொடர்ந்து கொண்டிருக்கிறது
உன் மீதான காதல்...
எக் கணமும் நேரக் கூடிய பிரிவின்
சாத்தியங்களைத் தள்ளிவிட்டு
தொடர்ந்து கொண்டிருக்கிறது
உன் மீதான காதல்...
இவற்றை எல்லாம் நீ இல்லை என்று
சாதித்தோ
ஆமாம் என்று ஆமோதித்தோ
எனை உதறிச் செல்லும் போது...
என்னிடம் மிஞ்சப் போவது
துரோகத்தின் முட்களோ
கோபத்தின் கத்திகளோ
க்ரோதத்தின் வலிய கயிறுகளோ அல்ல...
கண்களை இழந்தபின் கைகளில் பெற்ற
உன் உருவம் பொறித்த
அழகிய ஓவியம் மட்டும்..
என் உயிரின் ரத்தத் துளிகளைப்
பூசிக் கொண்டு...
No comments:
Post a Comment