Friday, March 23, 2012

ஒரு புத்தகத்தின் விண்ணப்பம்...












அமைதியும் பேரழிவும்
மென்மையும் வன்மையும்
எங்களில் அடக்கம்...

உன்னதமும் சீர்கேடும்
விடுதலையும் வேட்கையும்
உண்மையும் கபடமும்
வழிகாட்டலும் நெறிப்பிறழல்களும்
கூட எங்களில் ஐக்கியம்...

உயிரற்ற பொருளானாலும்
உயிரெழுச்சி செய்யும் வித்தை அறிந்தவர் நாங்கள்

உங்களின் சோம்பல் நேரப் புரட்டலிலும்
காத்திருப்பு அலுப்புகளில் அக்கறை அற்ற
ஒற்றைவிரல் திருப்புதலிலும்
எங்கள் முனகல் குரல் கேட்டுள்ளீரோ?..

உங்கள் எச்சை விரல் ஸ்பரிசத்திலும்
எச்சில் கோப்பை சொட்டலிலும்
நனைந்த போது எங்களின்
அழுகுரல் கேட்டுள்ளீரோ?..

ஆர்வக் கோளாறில் வெடுக்கென்று
பக்கம் புரட்டி
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
நுனிப்புல் மேய்ந்து
பாதி படித்த பக்கத்தை பிளந்து வைக்கும் போது
எங்களின் கதறல்கள் கேட்டுள்ளீரோ?..

உயிரற்ற ஜடம்தான் என்றாலும் உயிர்
எழுத்து சுமந்த எங்கள்
வலி அறிவீரோ?..

கவிதையோ கதையோ நாடகமோ நாவல்களோ
கட்டுரையோ வாழ்வியலோ
உயர்நிலையாய் இருந்தாலும்
கடைநிலையில் கவிழ்ந்தாலும்

நிகழ் நிலை உரைக்கும் தூதுவராய்
உங்கள் கையில் தவழ்வது
உங்கள் பிரயத்தனத்தால்..

நாங்கள் சுமந்த எழுத்துக்கள்
நரம்புகளில் பின்னப்பட்டவை
உயிர் ரத்தம் பாய்பவை
வார்த்தைகளின் இடைவெளிகள்
அதிர்வுகளால் நிரம்பியவை...

உங்களின் யாரேனும் ஒருவரது
மொட்டாய் இருக்கும்
ரசனையையும் கனவுகளையும்
பூக்கச் செய்பவை...

உங்களின் யாரேனும் ஒருவரது
ஏக்கக் குமுறல்களை
எரிமலையாய் வெடிக்கச் செய்பவை...

இனி புத்தகங்களை அவசரமாய் அல்ல
அன்போடு புரட்டுங்கள்
மெத்தனமாய் அல்ல மென்மையாய்
கையாளுங்கள்...

வரிக்கு வரி அதன் அதிர்வுகளை
விரல்களால் காணுங்கள்
கண்களால் ஸ்பரிசியுங்கள்...

புத்தகங்களை ஜடமாய் அல்ல
ஜ்வாலையாய் அணுகுங்கள்...

No comments: