Tuesday, April 3, 2012

மரணம் எனப்படுவது!!!...














எப்போதும் கூச்சலுடனும் குழப்பத்துடனும்
எதைத் தேடுகின்றோம்
என்பதே அறியாத மனதை
அமைதியுறச் செய்வது மரணம்...

உடலைத் தள்ளி நின்று பார்க்கும் ஆத்மாவாக
உடல் உள் நோக்குகையில்
இத்தனை நாள் கோபமும் தாபமும்
சுயநலமும் அகங்காரமும்
அதிக அழுத்தமுடன் நாளங்களில்
ரத்தத்துடன் ஓடியிருப்பதைப்
புரிய வைப்பது மரணம்..

அன்பின் துளிகளை கண்ணீர் வழி வடித்து
வாக்கியமாக இருக்கும் பலவையும்
வாக்குகளாக மாற்றி தன் தொடு உணர்வால்
உணரச் செய்வது மரணம்...

இரவுமற்று பகலுமற்று இருக்கும்
சந்தியா காலம் போல
மொழிகளற்று கற்பிக்கப்படும்
உன்னத பாடம் மரணம்...

மரணம் பயத்தின் கடைசி கட்டம்
அமைதி மரணத்தின் உச்ச கட்டம்
ஆன்மாவுக்கு ஆனந்தம் எழுதும்
சிநேகக் கடிதம் மரணம்...

கோபமும் பிரியமுமாய் நடக்கும்
வாழ்க்கை துவந்த யுத்தத்தின்
முற்று மரணம்...

உடலைப் போற்றிய அசுரத்தனம் துறந்து
ஆன்மாவைப் போற்றும்
தேவ நிலை மரணம்...

பிறப்பின் துக்கமல்ல
துறப்பின் தெய்வநிலை மரணம்
ஆன்மாவின் அடுத்த அத்தியாயம்
இந்நீள் தூக்கம்...

சுக்கிலத்தில் பிறந்த உடலை
சுட்டெறித்துத் தொடரும்
புனிதப் பயணம் மரணம்...

Monday, April 2, 2012

தலைப்புக்கேற்ற கவிதைகள்- கோடிகள் குவித்திடுமோ குதூகலம்..
























உடல் மறைக்க உடை கேட்டேன்
பட்டாடை தருவித்தாய்

பசியாற உணவு கேட்டேன்
பாலண்ணம் படைத்திட்டாய்

உறைவிட மனை கேட்டேன்
மாளிகையில் வாசம் தந்தாய்

படுத்து எழ பாய் கேட்டேன்
பஞ்சனை மேல் தஞ்சம் தந்தாய்

பட்டாடை உடுத்திக் கொண்டு
பால் கிண்ணம் கையில் ஏந்தி
பத்தடுக்கு மாளிகையில்
பஞ்சனை மேல் தனித்திருக்கேன்

ரசிக்கக் கற்றுக் கொடுத்தவனே
நீ ருசிக்காமல் போனதெங்கே?..
மனம் மயங்க வைத்தவனே
என் மணம் மறந்து போனதெங்கே?

பாதி நாட்கள் ஊடலிலும்
பாதி நாட்கள் தேடலிலும்
கூடல் குறைந்து மீதி வாழ்க்கை போனதெங்கே?..

கடல் முடிவாய் நானிருக்க‌
தொடுவானமாய் நீ இருக்க‌
தொடர்பிருந்தும்
தொடத் தொடத் தொலைந்து போனதெங்கே?..

கட்டியணைக்க நீயும் இல்லை
கட்டியழுத உடலும் இல்லை
கட்டு கட்டாய் பணம் மட்டும்
கட்டையிலும் வேகாமல்
கல்லாய் மாறிக் கனக்குதிங்கே....

Saturday, March 31, 2012

வெற்றுப் படகு...










தனிமையிலே இனிமை கண்டு
வெள்ளி நிலவின் வெளிச்சத்திலே
நீல நதியை தழுவிச் சென்று
யோக நிலையை எட்டியிருந்ததது
படகில் இருந்த என் மனது...

சட்டென்ற அதிர்வில் படகின் குலுக்கலில்
தடுமாறி இடம் மாறி
கட்டுக் கடங்கா கோபத்துடன்
சகட்டு மேனிக்கு வசவுச் சொற்களை
நுனி நாக்கு வரை உற்பத்தி செய்து
பொங்கி எழுந்த கோபப் பிழம்பு
ஆயாசமாய் அடங்கியது...

வெளிப்படுத்தாத அவ்வார்த்தைகள்
அயர்ச்சியின் உச்சத்தில்
மன அழுத்தம் கூட்டி விட்டு
தன்னைக் கழித்துக் கொண்டது
சுழித்துச் சென்ற நீரலையில்
இடித்துச் சென்ற
வெற்றுப் படகைப் போல...

Friday, March 30, 2012

தலைப்புக்கேற்ற கவிதைகள்- கண்களை வருத்தும் கண்மணிகள்..















இருட்டரைக்குள் நான் இருந்தேன்
இருள் நிறந்தான் பார்த்திருந்தேன்

வெளிச்சமென நீ வந்ததாலே
விழியிழந்தும் உன் அன்பு வழி
நான் பார்த்திருந்தேன்...

பார்வையற்றும் உன் வரவாலே
பல கனவு சுமந்திருந்தேன்..

ஆண்டவன் எடுத்த கருமணியை
பெற்றது எனை ஆண்டவன்
உன் தயவாலே...

ஆசை தீர பார்க்க வந்தேன்
என் முதல் பார்வை
உன்னில் பதிக்க வந்தேன்...

பாவி பார்த்த பார்வையிலே
பூ மால போட்ட உன் படம் தான்
கண்ணில் வந்து விழுந்ததய்யா
கண்மணிகள் இப்போ வருந்துதய்யா...

Friday, March 23, 2012

ஒரு புத்தகத்தின் விண்ணப்பம்...












அமைதியும் பேரழிவும்
மென்மையும் வன்மையும்
எங்களில் அடக்கம்...

உன்னதமும் சீர்கேடும்
விடுதலையும் வேட்கையும்
உண்மையும் கபடமும்
வழிகாட்டலும் நெறிப்பிறழல்களும்
கூட எங்களில் ஐக்கியம்...

உயிரற்ற பொருளானாலும்
உயிரெழுச்சி செய்யும் வித்தை அறிந்தவர் நாங்கள்

உங்களின் சோம்பல் நேரப் புரட்டலிலும்
காத்திருப்பு அலுப்புகளில் அக்கறை அற்ற
ஒற்றைவிரல் திருப்புதலிலும்
எங்கள் முனகல் குரல் கேட்டுள்ளீரோ?..

உங்கள் எச்சை விரல் ஸ்பரிசத்திலும்
எச்சில் கோப்பை சொட்டலிலும்
நனைந்த போது எங்களின்
அழுகுரல் கேட்டுள்ளீரோ?..

ஆர்வக் கோளாறில் வெடுக்கென்று
பக்கம் புரட்டி
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
நுனிப்புல் மேய்ந்து
பாதி படித்த பக்கத்தை பிளந்து வைக்கும் போது
எங்களின் கதறல்கள் கேட்டுள்ளீரோ?..

உயிரற்ற ஜடம்தான் என்றாலும் உயிர்
எழுத்து சுமந்த எங்கள்
வலி அறிவீரோ?..

கவிதையோ கதையோ நாடகமோ நாவல்களோ
கட்டுரையோ வாழ்வியலோ
உயர்நிலையாய் இருந்தாலும்
கடைநிலையில் கவிழ்ந்தாலும்

நிகழ் நிலை உரைக்கும் தூதுவராய்
உங்கள் கையில் தவழ்வது
உங்கள் பிரயத்தனத்தால்..

நாங்கள் சுமந்த எழுத்துக்கள்
நரம்புகளில் பின்னப்பட்டவை
உயிர் ரத்தம் பாய்பவை
வார்த்தைகளின் இடைவெளிகள்
அதிர்வுகளால் நிரம்பியவை...

உங்களின் யாரேனும் ஒருவரது
மொட்டாய் இருக்கும்
ரசனையையும் கனவுகளையும்
பூக்கச் செய்பவை...

உங்களின் யாரேனும் ஒருவரது
ஏக்கக் குமுறல்களை
எரிமலையாய் வெடிக்கச் செய்பவை...

இனி புத்தகங்களை அவசரமாய் அல்ல
அன்போடு புரட்டுங்கள்
மெத்தனமாய் அல்ல மென்மையாய்
கையாளுங்கள்...

வரிக்கு வரி அதன் அதிர்வுகளை
விரல்களால் காணுங்கள்
கண்களால் ஸ்பரிசியுங்கள்...

புத்தகங்களை ஜடமாய் அல்ல
ஜ்வாலையாய் அணுகுங்கள்...

Wednesday, March 21, 2012

குறுங்கவிதைகள்...









நட்பு:
எல்லாரும் சிலாகிப்பது
பாலினம்
மாறாதவரை...

இரவு:
வளர்ந்த பின்னும்
வெம்மை தரும்
மற்றுமொறு கருவறை...

மேகம்:
எரியும் சூரியனையும்
நொடிபொழுது அணைத்து
குளுமை தரும் போர்வை...

காதல்:
ஒரு நொடியாவது
நானக நீ இருந்து பார்
நீ எனக்கு யார் என்பது புரியும்

முத்தம்:
இதழில் தென்றல் முத்தம்
இதயத்தில்
புயலின் சத்தம்...

Monday, March 19, 2012

உன் மீதான காதல்...











எல்லா எச்சரிக்கை உணர்வுகளையும் மீறி
தொடர்ந்து கொண்டிருக்கிறது
உன் மீதான காதல்...

எந்நேரமும் சந்திக்கக் கூடிய
ஏமாற்றங்களைக் கடந்து
தொடர்ந்து கொண்டிருக்கிறது
உன் மீதான காதல்...

எப்போதும் நடக்கக் கூடிய
துரோகத்தின் எதிர்பார்ப்புகளைத் தாண்டி
தொடர்ந்து கொண்டிருக்கிறது
உன் மீதான காதல்...

எக் கணமும் நேரக் கூடிய பிரிவின்
சாத்தியங்களைத் தள்ளிவிட்டு
தொடர்ந்து கொண்டிருக்கிறது
உன் மீதான காதல்...

இவற்றை எல்லாம் நீ இல்லை என்று
சாதித்தோ
ஆமாம் என்று ஆமோதித்தோ
எனை உதறிச் செல்லும் போது...

என்னிடம் மிஞ்சப் போவது
துரோகத்தின் முட்களோ
கோபத்தின் கத்திகளோ
க்ரோதத்தின் வலிய கயிறுகளோ அல்ல...

கண்களை இழந்தபின் கைகளில் பெற்ற
உன் உருவம் பொறித்த
அழகிய ஓவியம் மட்டும்..

என் உயிரின் ரத்தத் துளிகளைப்
பூசிக் கொண்டு...