Monday, December 31, 2012

வழி வழியாய் வரும் கதைகள்...



என்ன இருக்கிறது படிக்கவும் பார்வையிடவும்
வெள்ளைத்தாள் முழுவதும்
சிவப்பை மட்டுமே சிந்திக் கொண்டிருக்கும்
கருப்பு எழுத்துக்கள்..

பாட்டி தன் தாயிடம் கதை கேட்டாள்
புராணங்களும் இதிகாசங்களும்

பாட்டியிடம் என் தாய் கதை கேட்டாள்
கம்பராமாயணமும் கட்டபொம்பனும்

என் தாயிடம் நான் கேட்டேன்
திருக்குறளும் திருவிளையாடலும்

என் மகள் என்னிடம் கேட்டாள்
சிங்க ராஜாவையும் சிண்ட்ரெல்லாவையும்

தன் மகளுக்கு அவள் என்ன சொல்வாள்
வன்முறையையும் வன்புனர்வையுமா????..

Saturday, December 29, 2012

ஹைக்கூ...


யாருக்காகவோ எதற்காகவோ
சுற்றிக் கொண்டேயிருக்கிறது பூமி
வானமாய் நீ...

Wednesday, December 26, 2012

விளிம்பு நீரென...


வெளிச்சத்தில் மறைந்திருக்கும் இருளைப் போல

எனதான அத்தனையிலும் நீயே
நிறைந்திருக்கிறாய்...

உன் ஸ்பரிசம் தீண்டும் பொழுது
சிறகுகள் அமிழ்த்தி அமரும்
பருந்தைப் போல
ஒரு கனத்த மௌனம் 
மனதை அழுத்துகிறது...

நமது ஒவ்வொரு சந்திப்பின் 
முடிவும்

எதிர்கொள்ளமுடியாத ஒரு
உண்மையாய்... ஊமையாய்...
நான் திரும்பும் வழி நெடுகிலும்
தொடர்கிறது 
எனை உறுத்தவாரே...

குழந்தையின் புரிந்து கொள்ளமுடியாத
புன்னகையும் அழுகையும் போல
உன் மீதான காதலும் கசப்பும்
விளிம்பு நீரென என் கண்களில்

சொட்டியும் விடாமல் வற்றியும் விடாமல்...

Sunday, October 21, 2012

தவிர்ப்பும்.. தவிப்பும்...


எனது அழைப்புகளை நீ
தவிர்க்க ஆரம்பித்த பின்
உனை அழைப்பதை நிறுத்திவிட்டேன்

நீ தவிர்க்கும் கோபத்தால் அல்ல

எடுக்காத அழைப்பின் ரீங்காரம்
என் அலைபேசியில் நாராசமாகவும்
உனதலைபேசியில் அபஸ்வரமாகவும்
ஒலிக்கும் என்ற தவிப்பால்...

Wednesday, October 17, 2012

யுத்தம்...


அறை எங்கும் சிதறிக் கிடந்தன
நாம் ஒருவரை ஒருவர்
பேச்சுக்களால் குதறிக் கொட்டிய
வார்த்தைகள்..

அவற்றின் ஒவ்வொறு அங்கமும் கீறப்பட்டு
ரத்தம் உறைந்தும் உறையாமலும்
விடைத்துக் கொண்டிருந்தன...

இனி வெட்டுவதற்கோ சிந்துவதற்கோ
வார்த்தைகள் இல்லாது
தீர்ந்திருந்த போழ்தில்...

உதட்டில் ஒரு சிகரெட்டைப்
பொருத்திக் கொண்டு
தலையை உதறி வெளியில் சென்றாய் நீ...

துடைப்பமும் முறமும் கொண்டு
அள்ள ஆரம்பித்திருந்தேன் நான்...

நிசப்தமான நம் அறை
அடுத்த யுத்தத்தைப்
பேசிக் கொண்டிருந்தது
நான்கு சுவர்களுடன் மௌனமாக...

Saturday, October 13, 2012

கடன்!!...



கடலிடம் நிறைய
கடன் வாங்கிவிட்டாயோ!!
உப்பு நீரை அடிக்கடி
என் கண்களிடமிருந்து
பெறுகிறாயே??

Thursday, October 4, 2012

நீயும்???... நானும்...


அனுமதி கேட்டு காதல் செய்தவனும் நீ
அனுமதியின்றி காயம் செய்தவனும் நீ

மிட்டாய் தொலைத்த குழந்தையாக
அழுது நிற்கிறேன்
உனை எதற்காகத் தொலைத்தேன்
என்பது புரியாமலேயே..

தீராத தனிமையின் மை கொண்டு
எழுதத் துவங்குகிறேன் உனக்கான
ஒரு கவிதையை...

எழுத்தின் சுவடுகளாக
உன்னால் கத்தரிக்கப் பட்ட
என் சிறகுகளே வந்து விழுகின்றன...

விசாரிப்புகள் ஏதும் அற்ற
உனது தீர்ப்பை கூறும் முன்னமே
நீ ஒடித்திருந்த
பேனா முட்களின் முனைகளில்
நொறுங்கிவிட்டிருந்தேன் நான்..

Tuesday, September 25, 2012

தீராத பிரார்த்தனை ஒன்று...


தீராத பிரார்த்தனை தாங்கிய
காகிதத்துண்டு ஒன்று எட்டியபோது
கடவுள் மொழி புரியாதவராய்
இருந்தார்...

தீராத பிரார்த்தனையின்
குரல் ஒன்று கதறிய போது
கடவுள் காதுகளற்றவராய் இருந்தார்

தீராத பிரார்த்தனையின்
கண்ணீர்த் துளி ஒன்று
சொட்டிய போது கடவுள்
கண்களற்றவராய் இருந்தார்

தீராத பிரார்த்தனையின்
வலி ஒன்று அறைந்த போது
கடவுள் உணர்வுகளற்றாவராய் இருந்தார்

தீராத பிரார்த்தனை ஒன்று
தன் உருச்சிதைந்து
அழுகலின் நாற்றத்துடன் பரவியபோது
கடவுள் உணர்ச்சியற்றவராய் இருந்தார்

இப்படித் தீராத பிரார்த்தனைகள்
சுமந்து பால்வெளியில்
அலைந்து கொண்டிருக்கும்
காகிதத் துண்டுகள் எத்தனையோ?..

அவை என்றேனும் ஒருநாள்
பொழியக் கூடும் அமில மழையாக
கடவுளின் துகள்களையும் கரைத்துக் கொண்டு...

Wednesday, September 19, 2012

பருவம் மாறும் பிரியங்கள்...












ஒரு இளவேணிற் காலத்தே

புல் நுனிகளில் பனித்துளி போல
வந்து அமர்ந்தது உன் பிரியம்...

ஞாயிறின் முதல் கிரணம்
ஓடையில் விழுந்தது போல
தவழ்ந்தது உன் பிரியம்...

வண்ணத்துப் பூச்சியின்
மென் உறிஞ்சுதலாய்
தொடங்கியது உன் பிரியம்...

காற்றில் மகரந்த வாசனை போல்
உள் கலந்தது உன் பிரியம்...

முளையின் பற்றுதல் போல்
வேர்பிடித்து ஊடுருவியது
உன் பிரியம்...

கொழுவில் கொடி போலப்
பற்றிப் படர்ந்தது உன் பிரியம்...

அடை மழைக் காலத்தின்

அடித்துப் பெய்யும் மழையெனவும்
கட்டறுந்து வீசும் காற்றாகவும்

கடும் கோடையின்
சுட்டெரிக்கும் கதிரெனவும்
வரளச் செய்யும் வெப்பமாயும்
மாறிவிட்டிருந்தது...

பருவங்களைப் போல
இப்போது உன் பிரியங்களும்

Tuesday, September 18, 2012

நம் சிநேகம்...



















ஒரு கோப்பை காப்பியுடனாக
ஆரம்பித்தது நம் சிநேகம்...

சிறு தூரலென சிதறி
இலை மேல் தேங்கிய
துளியாகச் சறுக்கி
உயிரென வேரில் நுழைந்தாய்...

காமம் க்ரோதம் வன்மம் பயம்
பகட்டு வேஷம் பொறாமை எதுவுமற்று
மகிழ்ச்சி மட்டுமே கொண்டிருக்கும்
குழந்தை போல் இதயத்தை மாற்றினாய்...

வாழ்க்கையை அந்நிமிடத்திற்காகவே
வாழவைத்தாய்
என் ஆசைக்கும் மீசை
முளைக்கச் செய்தாய்...

உடைந்த வளையல் துண்டுகளிலும்
சாக்லேட் பேப்பரிலும்
புத்தக அட்டைகளிலும்
மின்னி மறையும் உன் பிம்பத்துடன்

அருந்திக் கொண்டிருக்கிறேன்
உனக்காக நிறைத்த கோப்பையை
வேறு எவருடனும் பகிரமுடியாமல்....

மனதின் தவிப்பையும்
சேர்த்து விழுங்கிக் கொண்டு...

Saturday, September 1, 2012

ஊர்மிளை...














மரவுறி தரித்து ராமன் முன்னேற
பத்தினித் தெய்வமென சீதையும்
பின் தொடர்ந்தாள்..

அண்ணன் திருவடி தொழும் சேவகனாய்
உடன் சென்றான் தமையனவன்

மீளாத் துயர் கொண்டிருந்தாலும்
சத்ரியக் குலமகளாய்
சுமித்திரையும் விடை கொடுத்தாள்...

மாளாத் துயரடைந்த தசரதனும்
சொல் காக்க வழியணுப்பினான்..

அவரவர் கடன் அவரவர் கடமை
அவரவர்கள் சிரத்தையாய் நிரூபிக்க..

தமக்கை மணம்புரிந்ததனால்
தானும் ம(ன)ணம் புரிந்து கொண்டு
இலவச இணைப்பாகவே இலக்குவனனை
சேர்ந்த போதும் சோரவில்லை அவள் மனது..

மாளாக் காதலிலும் அன்பிலும் கொண்டவனைக்
அவள் கண்டிருக்கையிலே
தாளாத பிரிவொன்று தானாகவே வருமென்று
பேதை அவள் கனவினிலும் நினையவில்லை...

ஈரேழு புவனத்திலும் சிறந்தவன் நீயென்று
இனி என் அன்னை நீ தந்தை நீ
கொண்டவன் நீ உற்றவன் நீ சொந்தம் நீ பந்தம் நீ
உயிர் மூச்சு நீ என் சகலமும் நீ என நம்பிக்
கைப் பிடித்தவன் தன் துணை மறந்து
இல்லறம் துறந்து துற வரமாய் வேண்டி
ஈரேழு வருடங்கள் உனைப் பாரேன் என
தமையனுடன் சென்ற போதும்...

தாயாய் தந்தையாய் காதலனாய்
கணவனாய் காவலனாய்
கடைசி வரை உனைப் பிரியேன்
என அக்னி வலம் வந்தவனை
மனக் கடலில் மூழ்கச் செய்ய
அவன் கண்ணீராய் வெளியேறிய போதும்
துயருரவில்லை அவள் இதயம்

பிரிவு நெருப்பில் தன் ஆற்றாமை எரித்து
புடம் போட்ட தங்கமென ஒளிர்ந்தனள்
மணாளனின் மானசீகக் கட்டளையால்
அரண்மனையில் அடங்கிப் போன
அடிமை இவள்
நந்தவனத்தின் நடுவே சிறையிருந்த
மகரந்தம் தவிர்த்த பெண் பூ இவள்

கண்களிலும் காண்பதிலும் கனவினிலும்
கணவனையேக் கண்டு
தனைக் கரைத்து தன் நாமம் மறந்து
ஒரு போதும் தன் நிலை மாறா
வைராக்கிய யோகி இவள்..

உடன் பிறந்தவள் கணவனுடன் சென்றுவிட
ஊடாகப் பிறந்த மற்றவளும்
தன்னவனுக்குத் துணையிருக்க

தன் துணையை வழியனுப்பி
துணையற்ற தனிமரமாய் தானாகி
ரகுவம்சத்தின் களங்கம் கழுவிய
தியாகச் சுடர் இவள்..

காதலை காமத்தை தாபத்தை
விரகத்தை மோகத்தை இளமையை
அடக்கிய வைராக்கிய வீரி இவள்..

வஞ்சிக்கப் பட்டு ஏமாற்றப் பட்டு
மறக்கப்பட்டவளாயினும்
சிறிதும் அங்கீகாரம் கிடைக்கப் பெறாத
கற்புக்கரசியாம் தியாகச் சுடராம்
ஊர்மிளையை இங்காவது சிதைக்காமல்
சிந்திப்போம் சிறப்பிக்க....

சீதை! நளாயினி! கண்ணகி! சாவித்திரி!
மாதவி! அகலிகை! வாசுகி!...
கொண்டவரின் அருகிருந்து
உறவாலே உடலாலே உடனிருந்து
கற்பிதம் ஓம்பியவர்கள் கற்புக்கரசிகள் எனில்..

கொண்டவன் உடன் உறையாமல்
உளத்தால் மட்டும் உணர்ந்திருந்து
கற்பை சிறந்தோம்பிய இவள்
கற்புக்கு பேரரசி...


நினைவு நாள்...












நேற்றே நான் இறந்திருந்தேன்
இன்று உனது
நினைவு நாள்...

Friday, August 10, 2012

நான் ஈ...













சிலந்தி போல என்னுள்
வலை பின்னிச் செல்கிறாய்..

மனமெனும் குச்சியால்
அடித்துக் கொண்டே இருக்கிறேன்...

அதையும் உன் பின்னல்களால்
பற்றிக் கொள்கிறாய்...

மறுபடியும்
நான் ஈ ஆகிவிட்டேன்...

எப்போதும் போல் மீண்டும்
உன்னில் மாட்டிக் கொண்டு...

Wednesday, August 1, 2012

சருகு...












என் வன மரத்தின்
நீண்ட கிளை ஒன்று
மௌனமாக அழுது கொண்டிருந்தது
தான் உதிர்த்துவிட்டிருந்த
ஒரு பழுத்த இலைக்காக...

அவ்விலை சருகெனப் பறந்து
நெடிய மலையின் உச்சியில்
சரேலென இறங்கும் அருவி வழி
பயணித்து...

அகன்ற ஆற்றின்
வட்டச் சுழல்களில்
சுற்றிக்கொண்டிருந்து...

சிறிய மீனொன்றின்
முத்தத் தொடுதலில்
துள்ளிப் பறந்து...

சிறுமி ஒருத்தியின்
கை அளாவலில்
ஒட்டிக்கொண்டு...

மீண்டும் வனம் வந்து சேர்ந்தது
வானம் பாடியின்
மெல்லிய இறகோடு...

Saturday, July 28, 2012

அங்கே நீ...














உனை நோக்கிய நெடுந்தூரப் பயணம்

வழியில்
வண்ணத்துப்பூச்சி ஒன்று
தன் இறகுகளின் வண்ணத்தை எல்லாம்
என் மேல் உதிர்த்துச் சென்றது...

தென்றல்
பூக்களின் மகரந்தத் துளிகளைத்
தாங்கி வந்து எனைத் தழுவிச் சென்றது...

புல் நுனியில் தவமிருந்த பனித்துளிகள்
என் பாதம் தொட்டவுடன்
முக்தியடைந்தன...

மரக்கிளைகள்
என் வெயில் வெளியில்
தாழ்ந்து வந்து குடை பிடித்தன...

சில் வண்டுகள்
பண் பாடி வாழ்த்துச் சொல்லின..

இதை எதையுமே ஏற்கும்
மனநிலை தவிர்த்து

உனை மட்டுமே கண்கள் தேட
நீண்ட சாலைகளில் தனித்து அலைந்து
உனைக் காணாமல் மிகச் சோர்வுற்று
எனதறைக்குத் திரும்பினேன்...

அங்கே நீ...
வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்கள் ஏந்தி
மகரந்தத்தின் வாசம் பூசி
என் பாதத்தில் பதித்த
உன் முத்தத்தின் ஈரத்துடன்
எனக்கான ஒரு பாடலை இசைத்துக் கொண்டு
கருணையின் குடை பிடித்து அமர்ந்திருந்தாய்...

Thursday, July 19, 2012

ஒரு நடிகையின் பேட்டி...














அது ஒரு நடிகையின் பேட்டி..

நடு நடுவே அப் பெரிய நடிகரைப் பற்றிய
சிலாகிப்பும் நெகிழ்ச்சியுமாக
ஆனந்தக்?!.. கண்ணீருடன்
அவரின் எளிமையும்
தயாள தாராள குணமும்
பத்தி முழுவதும் விரவிக் கிடந்தன..

அக்கண்ணீருக்குப் பின்னே
உறைந்திருந்த ரத்தத் துளிகள்
மறைக்கப் பட்டு
புனைவாக ஒரு சரித்திரம்
அச்சாக்கப் பட்டிருந்தது...

Monday, July 16, 2012

மொழிபெயர்ப்பு.....














என் மௌனங்களை
மொழிபெயர்த்தவன் நீ ...

நீ விதைத்த மௌனங்கள்
இன்று என்னுள் முளையாகி
கொடியாகி பூத்துக் கொண்டிருக்கிறது
கவிதைகளாக...

வேரில் உன் வாசம்
இலைகளில் உன் சுவாசம்
கிளைகளில் உன் நேசம்
என வளர்த்து...

அரும்புகளில் என் உயிர் சேர்த்து
உனக்கென மலர்விக்கிறேன்...

என் கவிதைக் கொடியில் பூக்கும்
ஒவ்வொரு பூக்களும்
உனைச் சேரும்
ஜென்மங்கள் தோறும்...

Monday, July 9, 2012

உரிமை???..




















சித்தார்த்தன் புத்தனான்
இல்லறம் துறந்து...

வெங்கட வரதன் ராகவேந்திரனானன்
இல்லறம் துறந்து...

வர்தமானன் மாஹாவீர் ஆனான்
இல்லறம் துறந்து...

இல்லறம் என்பது இருவர்
சார்ந்தது என்றால்..

முடிவின் உரிமையை
ஒருவர் மட்டும் எடுப்பது ஏன்????...

Sunday, July 8, 2012

உனக்குப் புரியும் என...














பிறந்த நாள் பரிசுடன்
கவிதையும் தர நினைத்தேன்
உனைப்பற்றி நினைத்தவுடன்
முட்டி நின்ற வார்த்தைகளுள்
எதை வடிக்க? எதை விடுக்க?
தெரியவில்லை?!..

எழுதாமலே விட்டுவிட்டேன்
வழக்கம் போல்
என் மௌனம்
உனக்குப் புரியும் என...

Tuesday, July 3, 2012

நினைவுக்கடன்...












பழைய நினைவுகளை
அசை போடும் போதெல்லாம்
பக்கத்து வீட்டு பர்வீன் அம்மா
முகத்துக்கு பதிலாக
15 வருடங்கள் முன் அவள் கடன் வாங்கி
கொடுக்க மறந்த 500 ரூபாய் தாளே
நினைவுக்கு வந்து தொலைகிறது...

Thursday, June 28, 2012

முழுமையாய்...













நீ முழுமையானவன்
உனதான அனைத்தையும்
என்னிடம் கொடுத்தபின்னும்
நீ முழுமையாகவே இருக்கிறாய்...

கிணறு...











உடைந்த குடம்
ஒன்றாகிவிட்டிருந்தது
நீர்...

Tuesday, June 26, 2012

இருளில்...













விளக்கற்று என் கைகள்
எரியும் விளக்காக
நீ...

சொல்லாமலே...














சொல்லாமல் அடக்கி
வைத்த சொற்கள் எல்லாம்
தொண்டைக் குழியில் புதைந்து பாராமாகி
நெஞ்சை அழுத்துகிறது...

சேர்த்து வைத்த வார்த்தைகள்
செல்லாத காசாய் துரு பிடித்து
இதயத்தை அறுக்கிறது...

நான் விட்டுச் சென்றால்
நீ என்ன செய்வாய்??..
விளையாட்டாய் நீ கேட்ட அன்றே
நான் சொல்லியிருக்க வேண்டுமோ?!..

சத்தியமாய் வாழ்வேன் உயிரற்று என...

Sunday, June 24, 2012

கண்டதும்??... கண்டதும்!!!...













கவிதை எழுத வேண்டும் அவனுக்கு
நாளை பத்திரிக்கையின் அச்சில்
அவனது வரிகள் கோர்க்கப் படவேண்டும்

அவன் மனம் கவிதைக்கான கருவைச் சுற்றி
தெரிந்த வார்த்தைகளுடனும்
தெரியாத மொழிகளுடனும்
வட்டமிட்டுக் கொண்டிருந்தது..

சுழலும் மின்விசிறியின்
அலுமினிய இறகுகளின் சுற்றி சுழன்று
ஜன்னல் கம்பிகளில்
வௌவ்வாலாய்த் தொங்கி
ஒட்டடையின் அடுக்குகளில் மாட்டிக் கொண்ட
ஈயாய் சிக்கித் தவித்து
மூச்சு முட்டி

பின் சடக்கென பறந்தது அவன்
அரூப உடல் சுமந்து

நடை பாதை ஓரத்தில்
நடந்து கொண்டிருந்த
நாயின் புனர்வில் நிமிடம் போல் தங்கி

வண்டிக்காரன் பெண்டாட்டியின்
ஆடை விலகலை
சில நிமிடம் ரசித்து விட்டு

எதிர் வீட்டுச் சிறுமியின்
அந்தரங்கம் தொட்டுவிட்டு

அடுத்த வீட்டின் படுக்கை அறையினை
திருட்டுத் தனமாய் எட்டிப் பார்த்து
ஏக்கப் பெருமூச்சுடன் திரும்பி

தானே அவையாகவும்
அவைகளே தானாகவும்
கற்பனையில் திளைத்துக் களைத்துத்
திரும்பி வந்து

பேனா முனையில்
ஓய்வெடுத்து மூச்சு வாங்க...

இறுதியில் இந்து மதக் கோட்பாடும்
புத்தனின் போதனையும்
எழுதத் தொடங்கிய நேரம்

கவிதை தானாகவே தன்னை
அழித்துக் கொள்ள ஆரம்பித்தது....

Saturday, June 23, 2012

இருந்தும்...
















எந்தக் கடவுளை வேண்டி
உனைத் திரும்பப் பெறுவேன்
எதை விட நேர்ந்து கொண்டு
உனை மறுபடி அடைவேன்..

கடவுளுக்கும் காதலுக்கும்
அப்பாற் பட்டு இருக்கிறாய்
உறவுக்கும் உரிமைக்கும்
எட்டாமல் இருக்கிறாய்...

பிரிவையும் பிரியங்களையும்
நூல் நுணியில்
ஊசலாட வைக்கிறாய்...
தள்ளி நின்று
உயிர் கொண்ட உறவுக்கு தாளிடுகிறாய்...

நீராக மாறி என் தாகங்களைப் பருகுகிறாய்
மோகங்கள் எரித்துவிட்ட என் மௌனத்துள்
மோன யுத்தம் செய்கிறாய்...

நேர்கோடாய் இருந்த என்னை
வட்டமாக மாற்றிவிட்டு
நினைவுகளை உனை நோக்கி மட்டுமே
சுழற்றியடிக்கிறாய்...

சுழலில் எனை சுற்றவிட்டு
எட்ட நின்று நிபந்தனைகள் விதிக்கிறாய்
உன் கண் அசைவில்
என் தலை ஆடச் செய்கிறாய்...

இருந்தும்...
இனி என்ன செய்து
உனைத் திரும்பப் பெறுவேன்...

Monday, June 18, 2012

முரண்...












இலையின் அடிப் பரப்பில்
கூட்டுக்குள் இருந்ததைப் பார்த்து
உவ்வேக் ச்ச்சீய் புழு
என்றவள் ஓடினாள்
வண்ணத்துப் பூச்சியைப்
பிடிப்பதற்கு...

Sunday, June 17, 2012

வெளிச்சத்தில்...












ஒவ்வொரு இரவிலும்
இமைகள் சேரும் நேரங்களில்
உனைப்பற்றிய நிறைய நினைவுகள்
மெல்லிய இறகுகளாய்
என் கனவுகளை வருடிச் செல்லும்

என் வருகைக்காக பேனா முனை கடித்து
நீ காத்திருக்கும் தருணங்களும்
கண்டவுடன் பின்னிக் கொள்ளும்
உன் விரல்களின் அழுத்தங்களும்
வார்த்தைகள் உதிர்த்துவிட்டு
உதடுகள் பேசிய பாஷைகளும்
பிரிகையில் உன் கண்களில்
கண்ட தவிப்புகளும்

அத்தனையும் ஸ்பஷ்டமாக
இமைகள் மூடிய என் கனவின்
இருட்டுகளில் இமைக்க மறந்து
கண்டு களித்தேன்

எத்தனை எத்தனித்தும் கடைசிவரை
வெளிச்சத்தில் கண்ட உன் முகம் மட்டும்
நினைவுகளில் பதியவே இல்லை

Saturday, June 9, 2012

காத்திருக்கிறேன்...













நீ காதோடு செய்த சத்தம்
காதலோடு தந்த முத்தம்
என் நெஞ்சோடு செய்யும் யுத்தம்
உன் நினைவோடு நித்தம் நித்தம்

என் மூக்குத்தி ஸ்பரிசங்களை
நீ மூக்கால் உணரும் போதெல்லாம்
மூர்ச்சையாகிப் போகின்றது
நான் முடிந்து வைத்த
வார்த்தைகள் எல்லாம்

பாதைகள் தூரம் தான்
பயணங்கள் நீளம் தான்
உன் நினைவு நிழலாய்
தொடரும் மட்டும்
குறுகும் சாலை மாயம் தான்

கனவுகள் தின்று
நினைவுகள் மென்று
காத்திருக்கிறேன்
காதலில் கொஞ்சம் காதலோடு கொஞ்சம்...

குறுங்கவிதைக‌ள்...










பூமியில் ஆயிரம் நிலவுகள்
பனித்துளிகளில் நிலவின்
பிம்பம்...
____________________

ஏரி நீர்
குதிரையின் குளம்புச் சத்தம்
தெரித்தன நிலவின் துளிகள்...

நான்..













நான்..


விதைகளில் பெயரெழுதி
முளைகளில்
உனை எதிர்பார்க்கும்
காதல் விவசாயி...

வரம் கேட்க...














ஒற்றை நிலவாய் தவமிருந்து
உன்னிடம் வரம் கேட்க
நட்சத்திர வார்த்தைகளை
சேமித்து வைத்திருந்தேன்

அத்தனையும் சூரியனாய்
உனைக் கண்ட
நொடிப் பொழுதில்
காணாமல் போய்விட்டன...

புத்தன்...



















குளிர் நடுக்கிய இரவொன்றில்
புத்தன் சிலை எரித்து
நெருப்பு மூட்டிக் கொண்டிருந்தவனிடம்
அதிர்ச்சியுடன் கேட்டேன்
என்ன செய்து கொண்டிருக்கிறாய் என
அவன் நிதானமாகச் சொன்னான்
புற புத்தனை எரித்துக் கொண்டிருக்கிறேன்
என் அக புத்தனை காத்துக் கொள்ள..

Friday, June 8, 2012

தேநீர் கோப்பைகள்...













நம் இருவருக்கும்
இடையே ஆன
தேநீர் கோப்பைகளில்
என் கோப்பையை நான்
அருந்த அருந்த
உன் கோப்பை
நிரம்பிக்கொண்டே இருந்தது
மூன்றாம் கோப்பை
எப்போதும் போல்
காலியாகவே..

Wednesday, June 6, 2012

போன்சாய் காடு...












தனித்தே விளையாடிப் பழகிய சிறுவன்
தனக்கென விளையாட ஒரு
காட்டை சித்தரித்தான்
போன்சாய் மரங்களுடனும்
போன்சாய் விலங்குகளுடனும்

வானுயரும் சில்வர் ஓக்கும்
தேகம் விரிக்கும் தேக்கு மரமும்
விரிந்து பரந்த ஆலமரமும்
புத்தன் நிரைத்த போதி மரமும்
தன் உருவம் குறுக்கி போன்சாயாக
சிறுவனின் காட்டுக்குள்
சாமரம் வீசிக்கொண்டிருந்தது

கழுத்து நீண்ட ஒட்டகச் சிவிங்கியும்
காட்டுக்கே ராஜா சிலிர்த்த சிங்கமும்
தாவி ஒடும் புள்ளி மானும்
கவ்விப் பிடிக்கும் சிறுத்தைப்புலியும்
வகை வகையாய் பிற மிருகங்களும்
தன் சுயத்தை அடக்கி சிறிய உருவில்
துள்ளித் திரிந்தன சிறுவன் காட்டில்

பார்த்துப் பார்த்துக் களித்த சிறுவன்
சற்றே சலிப்புற மாற்றம் வேண்டி
மனிதனை காட்டுக்குள்
இறக்கினான் போன்சாயாக

சுற்றி சுற்றிப் பார்த்த மனிதன்
அங்கும் இங்கும் அலைந்த மனிதன்
சிற்றுருவம் பார்த்துச் சினுங்கிய மனிதன்
தன் பசி தான் தீர்க்க வேண்டி
பிடித்துக் கடித்தான் போன்சாய் முயலை

கடித்தவுடன் கைகள் வளர
அடித்துத் தின்றான் போன்சாய் மானை
அடிக்கக் கடிக்கக் அவன் உருவம் வளர
அதிர்ச்சி காட்டின போன்சாய் உயிர்கள்

புல்லைப் பிய்த்த மானும் வளர
மானை அடித்த புலியும் வளர
ஒட்டகம் பிடித்த சிங்கமும் பெருக்க
மரத்தின் வேர்கள் நகர்ந்து
அடுத்ததை உரிஞ்ச

போன்சாய் காடு ஆனது மிகையாய்
போன்சாய் மிருகங்கள் ஆனது பெரிதாய்
மனிதன் காட்டிய வழியைப் பிடித்து
குறுக்கே ஓடிய அவனை வதைத்து
அனைத்தும் ஓடின வெளியே குதித்து

மறுபடி சிறுவன் தனியனானான்
போன்சாய் பிணத்தை வெறிக்கலானான்..

Tuesday, June 5, 2012

உனதழைப்பு...

















மிக நீண்டதொரு
இடைவேளைக்குப் பிறகு
அலைபேசியில் உன் அழைப்பைப் பார்த்து
முகம் இறுகியது மனம் இளகியது
மூளை கரைந்தது கண் அழுதது
உதடு துடித்தது நாக்கு தழு தழுத்தது
மூக்கு விடைத்தது விரல்கள் பரபரத்தன
இத்தனையும் சமாளித்து
என் செவியில் நுழைந்த
உன் குரல் மனதை எட்டுவதற்குள்
இணைப்பு மீண்டும்
துண்டிக்கப்பட்டுவிட்டது...

Monday, June 4, 2012

உனது கோபம்...
















உனது கோபம் என்ற
துரு ஏறிய ஆணி
என் கையில் அறையப்பட்டு...

உடலெங்கும் குத்திக் குதறிக் கொண்டு
உருப்புகளை கீரியபடி சென்று
உனை முதலில் காட்டிய
என் விழி வழி
வெளி வந்து விழுந்தது...

உனக்காக எப்போதும்
துடித்துக் கொண்டிருக்கும்
என் இதயத்தின் ரத்தத்தை
அள்ளித் தெளித்துக் கொண்டு...

சவமாகி விழுந்தது உன் மீதான
என் நம்பிக்கை

Sunday, June 3, 2012

தொடர்பு எல்லைக்கு வெளியே....











இப்போதெல்லாம் இரவில்
என் அலைபேசியை
மௌனமாக்குவதே இல்லை
தொடர்பு எல்லைக்கு வெளியே
நீ மௌனமாக இருப்பதால்....

Friday, June 1, 2012

விட்டுச் சென்றவை...













பெரு மனதுடன்
எனக்காகவே எத்தனையோ
விட்டுச் சென்றாய்
உனக்காக சிலவற்றை மட்டும்
எடுத்துக் கொண்டு

நிலவைப் பரித்துக் கொண்டு
வானத்தை விட்டுச் சென்றாய்

ஈரத்தை உரிஞ்சிக் கொண்டு
மேகத்தை விட்டுச் சென்றாய்

சுவாசத்தைத் திருடிக் கொண்டு
காற்றை விட்டுச் சென்றாய்

பார்வையை பிடுங்கிக் கொண்டு
கண்களை விட்டுச் சென்றாய்

வேர்களை வெட்டி கொண்டு
கிளைகளை விட்டுச் சென்றாய்

நினைவுகளை எடுத்துக் கொண்டு
தனிமையை விட்டுச் சென்றாய்

நீ விட்டுச் சென்றது இப்படி எத்தனையோ
என்னையும் சேர்த்து
உன்னைத் தவிர.....

எறும்பாய்...











மலைபோல் இருந்த மனதில்
எறும்பாய்த்தான் ஊரினாய்
மிக மெதுவாக...
மிக மென்மையாக...
மிகுந்த காலம் எடுத்துக் கொண்டு..

எறும்புதானே
என்ன செய்யும்
என இருமாந்திருந்தேன்..

நீ ஊரித் தேய்ந்த சரிவில்
எனை நீ எட்டித் தள்ளும்வரை...

ஊனப் பறவை....













சுட்டெறிக்கும் சொற்களை
ஒவ்வொரு நொடியும் வீசுகின்றாய்
பூதானோ என மயங்கியே ஏற்கின்றேன்...

புன்னகையை எதிர்பார்த்து
செந்தனலைப் பெறுகின்றேன்

காலங்கள் பல கடந்து
உன் காதலைப் பெற வந்தேன்
தூரங்கள் பல நடந்து
உன் தோள்களில் சாய வந்தேன்

கண்களாலேயே காயம் செய்து
எட்டி என்னை நிற்க வைத்தாய்

மிகத் தேர்ந்த கண்கட்டு வித்தைக்காரன் நீ

நீ தருகின்ற காயங்களை எல்லாம்
கிரீடங்களாக எனை ஏற்கச் செய்தாய்

என் கூட்டை விட்டு வெகு தூரம்
வந்துவிட்டேன்
உனக்குப் பரிசாக என் சிறகு ஒன்றை
கொய்து கொண்டாய்

நீ இல்லாது நடக்க
கால்களும் அற்று
ஒற்றைச் சிறகுடன் ஊனப் பறவையாக
இத்தனை தூரம் நான் எப்படிக் கடப்பேன்?....

Wednesday, May 30, 2012

இசைக் குறிப்பு...













கடலில் இருக்கும் மீன்
கடலைத் தேடிக் கொண்டிருப்பதை போல
என்னில் உன்னை வைத்துக் கொண்டே
வெளியே தேடுகின்றேன்....

இரவைப் பகல் தொடரும்
இயல்பு போல
நான் உன்னில் இருந்தபடியே
உன்னைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன்...

ஓடை நீரில் மலரை
பொத்திவைப்பது போலவே
உன் நினைவுகளை மறைத்து
தோற்றுப் போகிறேன்

பூட்டி வைத்திருந்த எனது கூடங்களில்
வாத்தியங்கள் எல்லாம்
எட்டிப் பார்த்து நீ
இழுத்து விடும் சுவாசத்தையே
குறிப்பாகக் கொண்டு
இசைக்கத் தொடங்கி விடுகின்றன..

நீ எப்போதும்
எனது இலக்காய் அல்ல
முடிவாகவே இருக்கிறாய்...

Tuesday, May 15, 2012

வேராய்.... வேறாய்












எனது கிளைகள் உனக்கான பூவை
ஒவ்வொருமுறை மலரச் செய்யும் போதும்
எனது வேர்கள் வென்னீரில் மூழ்குகின்றன

உனக்கான என் ஒவ்வொரு
புன்னைகையும்
ஒரு துளி கண்ணீரில் நனைந்தே
விரிகின்றது...

தேன் சொரியும் என் பூக்களின்
மகரந்தங்கள் யாவும்
ஊமத்தம்பூவின் கசந்த மௌனத்தை
தடவியே வருகிறது..

என் நந்தவனத்தில் விருட்சத்தின்
விதையாய் விழுந்தவன் நீ

உனக்கும் எனக்குமான பந்தம்
உனது கிளைகளை அழகு படுத்தும்
மலராகவோ
படர்ந்து தழுவும் கொடியாகவோ
துளிர்த்துத் தவழும் இலையாகவோ அல்ல

உன்னிலிருந்து மண் புதையும் வேராய்
வேறாய் மட்டுமே

என் மாலைகளின் மரணங்களின் முடிவில்
இருளில் நான் தடுமாறித் தவிக்கையில்
உயிர்த்தெழும் காலையாய்
நீ வருகிறாய்

துளித் துளியாய் மழைத்துளியாய்
என்னில் நிரம்புகிறாய்
நீ நிரம்ப நிரம்ப
நான் காலியாகிக் கொண்டே இருக்கிறேன்

Tuesday, May 1, 2012

முற்றத்து வெய்யில்...




உன் சிக்கலான கையெழுத்தை
என் சிக்கலவிழ்த்த
கூந்தலில் போடுகிறாய்....

வேண்டாம் என்ற என் கெஞ்சல்கள்
அனைத்தையும் உன் இதழ் எனும்
அழிப்பான் கொண்டே
அழித்துவிடுகிறாய்...

செய்யாத தவங்களுக்கு கிட்டிய
கேட்காத வரமாய் நேர்ந்துவிட்டது
உன் உறவு...

என் சமையலில் உப்பைப் போல நீ
அதிகம் சேர்க்கவும் முடியவில்லை
தவிர்க்கவும் முடியவில்லை...

மாற்றம் இல்லாதது மாற்றங்கள் மட்டுமே
உனது ஒவ்வொரு செயலாலும்
என் பருவங்களில் மாற்றங்களை
தலைகீழ்விகிதமாக்கியவன் நீ...

தெரிந்தே சக்கிரவியூகத்தில்
மாட்டியவள் நான்
எனது ஏற்பும் தோற்பும்
உனதாகிவிட்டது....

மழை நீர் போல் தேங்கி
இதயக் கேணியில் ஊற்றாக
பெருகுகின்றாய்...

நீ என்றேனும் ஒரு நாள் 
எனைக் கடந்துவிடக்கூடும்
எந்த முற்றத்திலும் நிற்காத
வெய்யிலைப் போல...

என் நிழலையும் பறித்துக் கொண்டு...

Sunday, April 22, 2012

தெரியாத முகவரியில்...















சில நேரங்களில் வார்த்தைகளை விட
வாக்கியங்கள் உணரவைப்பதற்கு
சுலமாகிவிடுகிறது..

என் வார்த்தைகளை ஆட்கொண்ட
வாக்கியம் நீ
உன்னை உணரவைத்தல் எனக்கு
என்னை உணர்வதைப் போல...

தெரியாத முகவரி ஒன்றில்
எனக்கானதொரு அழகிய
வீட்டைக் கட்டுகிறாய்....

உனைப் பற்றிய கனவின்
வண்ணங்களில் மூழ்கி
எண்ணங்களில் கரைகிறேன்...

காதலை ஊனமாக்கிவிட்டாய்
அதனாலேயே நான்
மாற்றுத்திறனாளி ஆகிவிட்டேன்...

நீ பரிசளித்த கைக்கடிகாரத்தின் முட்கள்
நகர்ந்து கொண்டே
காலத்தை நகர்த்திக் கொண்டே
எனை கேலி செய்கிறது...

கனவுகளில் எப்போதும்
அலை தொடாத மணற்பரப்பில்
தேடிக்கொண்டே இருக்கிறேன்
எதைத் தொலைத்தேன் என்பது
தெரியாமலேயே...

Saturday, April 21, 2012

எப்படிப் பகிர்ந்து கொள்வதென்று...













கண்ணீர் சோகம் வெறுமை
ஏமாற்றம் கோபம் அழுகை அறற்றல்
இதில் எதிலுமே அடங்கிவிடாமல்

தனித்து நிற்கிறது உன்
பிரிவைச் சொல்லிய மௌனம்..

சகலத்தையும் உன்னுடன்
பகிர்ந்து பழகிய பின்

உதிர்ந்து கொண்டிருக்கும்
உன் நினைவுகளைப்
பொறுக்கி எடுத்துக் கொண்டிருக்கும்
எனக்குத் தெரியவில்லை...

நீ அற்ற தனிமைகளை உன்னுடன்
எப்படிப் பகிர்ந்து கொள்வதென்று..

Friday, April 20, 2012

உன் விரல்கள்....













காலன் போல மெல்ல நகர்கிறது
இப் பகல்
மரணம் போல சட்டென்று
ஆட்கொள்கிறது இரவு...

இருளின் அகண்ட மௌனத்தில்
ஆரம்பித்துவிடுகிறது உன் பிம்பங்களின்
ஒளி இரைச்சல்கள்...

பழைய தொடுதல்களினூடே
புதிய கதை எழுதி நகர்கின்றன
உன் விரல்கள்...

புதிரைப் போல சிதறிக்கிடக்கும்
உன் விரல் உதிர்த்த சொற்களை
வரிசைப் படுத்தி
வாக்கியமாக்குவதற்குள்ளாகவே...

அடுத்த கதையை
எழுதத் தொடங்கிவிடுகிறாய் நீ...

Tuesday, April 17, 2012

பகிரப்படாமலேயே....














நாம் பகிர்ந்து கொண்டிருக்கிறோம்
நிறைய சொற்களை
நிறைய உணர்ச்சிகளை
நிறைய செய்திகளை...


இன்னும் பகிரப்படாமலேயே இருக்கின்றன
ஒரு சில உணர்வுகளும்
மிகச் சில மௌனங்களும்...

சொக்கட்டானில் காய்கள்
நகர்த்துவதைப் போலவே
என்னிடம் உன் சொற்களை
நகர்த்துகிறாய்....

இழப்புகள் தெரிந்தும்
இசைவாகவே வெட்டுப் படுகிறேன்..

உன் ஒரு முத்தத்தில் உயிரிழந்து
மற்றொன்றில் உயிர்த்தெழுகிறேன்...

தடுமாறுவதும் தடம் மாறுவதுமான
தருணங்களின் ஏதோ ஒரு துளியில்
நீ வராமலேயே தொடங்கலாம்
என் இறுதி யாத்திரை...

யாருமற்ற தனிமையில்
சில்லிட்ட என் உடலுள்
உன் அணைப்பின் கத கதப்பைச்
சுமந்து கொண்டு....

Sunday, April 8, 2012

கொஞ்சம் காதலும்.. கொஞ்சக் காதலும்...














1. என்ன இது?!...
எந்தச் சாலையில் நான் நடந்தாலும்
உன் இருப்பிடத்திற்கே
கொண்டுவிடுகின்றதே?..

2. என் தனிமைக் கதவின்
தாழ் நீக்கிவிட்டு
உன் இதயச் சிறையில் எனைப்
பூட்டிவிட்டாயே?

3. வேதனைக் கூட்டிடும் மாலையில்
சோதனையாக உன்
நினைவு...

4. இது என்ன?!..
என் இதழ்களைச் சுற்றி
தேனீக்கள்?
ஓ!.. சற்றுமுன் நீ
முத்தமிட்டுச் சென்றாயோ!?..

5. எத்தனை முறை கடலாய் மாறி
நீ எனைக் கொண்டாலும்
உன் நினைவுகளால் குளிர்ந்து
மழையாகி மீண்டும் உனையே அடைகிறேன்..

6. தேனாகி பெயர் தெரியாததொரு
அழகிய பூவில் நான்
மறைந்திருக்கிறேன்
முடிந்தால் வண்டாகி மிகச் சரியாக
எனைத் தேடி எடுத்துக்கொள்...

Friday, April 6, 2012

தலைப்புக்கேற்ற கவிதைகள் - கையற்ற பொம்மைகள்...














கால்களற்றவன்
கைகள் ஏந்தி வருகையில்
நின்றிருந்த பேருந்து
நகரும் வரை
சில்லரை தேடுவதாய்
பாவனை செய்தன
நீட்சிகள் மட்டுமே பெற்றிருந்த
கையற்ற பொம்மைகள்...